திலீபன் நினைவேந்தலை குழப்பியது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே - ஜனநாயகப் போராளிகள் குற்றச்சாட்டு
"போராளிகளை பற்றிக் கதைப்பதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு எவ்வித அருகதையும் இல்லை" - என ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவதூறை பரப்பியமைக்கு கண்டனம்
அவர் மேலும் கூறுகையில், "தியாகி திலீபனின் நினைவேந்தலின் போது தங்களின் பிழைகளை மூடி மறைக்க அவசர அவசரமாக ஊடக சந்திப்பை நடத்தி பச்சைப்பொய்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சுகாஷ் அவிழ்த்து விட்டுள்ளார். பொய்களைக் கூறி முன்னாள் போராளிகள் மீது அவதூறைப் பரப்பியமைக்கு அவருக்கு எமது கண்டனங்களை தெரிவிக்கின்றோம்.
தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் நினைவேந்தலின் போது இருவர் காவடிகள் எடுத்து வந்தபோது பொதுமக்கள், முன்னாள் போராளிகள் என பலர் அவ்விடத்தில் நின்றார்கள். காவடி வரும் போது எந்த குழப்பமும் ஏற்படவில்லை.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்தான் குழப்பங்களை ஏற்படுத்தினார்கள். காவடியை இறக்குவதற்காக பொதுச்சுடரைச் சற்று தள்ளிவைக்குமாறு கூறிய போதே குழப்பங்கள் ஏற்பட்டன. தீபத்தைத் தள்ளி வைக்க முடியாது, காவடியை இங்கே இறக்க முடியாது என அடாவடி செய்த பின்னரே குழப்பம் ஏற்பட்டது. அது அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்தன.
சுயலாப அரசியல்
மேலும் தாம் ஆறு ஆண்டுகளாக நினைவேந்தல் செய்து வருகின்றனர் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கூறுகின்றார்கள். யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2016ஆம் ஆண்டு தியாக தீபத்தின் நினைவிடத்தை முதலில் துப்புரவாக்கி முதல் நிகழ்வை நாங்கள்தான் செய்தோம். அதற்கு ஆதாரங்களாக ஊடகங்களில் செய்திகள் உள்ளன.
இவ்வாறாக இருக்க ஆறு ஆண்டுகளாக தாம் செய்கின்றோம் என்கின்றார் சுகாஷ். அவருக்கு கணக்கு தெரியாது போல். இனி நாம் அவருக்கு ஒன்று, இரண்டு சொல்லி கொடுக்க வேண்டும் போல். நாம் முதல் முதல் செய்த ஒரு வருட நிகழ்வை மூடி மறைத்து தங்களின் சுயலாப அரசியலுக்காக எங்களால் நினைவுகூரப்பட்ட நினைவேந்தலை அவர்கள் மறைக்கின்றார்கள்.
2017ஆம் ஆண்டு நினைவேந்தல்
அடுத்து 2017ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்காக நாம் அவ்விடத்தைத் துப்பரவு செய்யும்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் வந்து எங்களோடு கதைத்தார்கள். நாங்கள் இரு தரப்பும் சேர்ந்து ஒன்றாக செய்வோம் என்று எங்களுடன் அவர்கள் பேச்சுக்களை நடத்தினர்.
மறுநாள் கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் கதைத்து நாங்கள் சம்மதம் தெரிவித்த பின்னர் இரு தரப்பினரும் சேர்ந்துதான் 2017ஆம் ஆண்டு நினைவேந்தலைச் செய்தோம். அப்படியாயின் நாங்கள் யார் ?
இப்போது எங்களை 2015ஆம் ஆண்டு மகிந்தவால் உருவாக்கப்பட்டவர்கள் என்கிறார்கள். அப்படியாயின் ஏன் 2017ஆம் ஆண்டு எங்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அழைத்து கதைக்க வேண்டும் ?
சஜித்துக்கு ஆதரவு
நாங்கள் மகிந்த ராஜபக்சவையோ, கோட்டாபய ராஜபக்சவையோ இரகசியமாக சந்திக்கவில்லை. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் எங்களை சந்திக்க வரச் சொல்லி அழைப்பு விடுக்கப்பட்டது. நாங்கள் போனோம். அது ஊடகங்களுக்கும் தெரியும். பொய் சொல்லி ஒளியவில்லை.
சந்திப்பின் போது தேர்தலில் தமக்கு ஆதரவு தருமாறு ராஜபக்சக்கள் கோரினார்கள். நாங்கள் போராளிகள் விடயங்கள் உட்பட சில பிரச்சினைகளை சொன்னபோது அவர்கள் அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை. அதனால் நாம் சஜித்துக்கு ஆதரவு வழங்க முடிவெடுத்து யாழ். ஊடக மையத்தில் ஊடக சந்திப்பு நடத்தி அதனை பகிரங்கமாகத் தெரிவித்தோம்.
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் 'வட்ஸ் அப்' குழுவில் வந்தது என்று ஒலிப்பதிவில்
ஒரு சிறுதுண்டை காட்டித் திரிகின்றார்கள். அப்படி ஜனநாயகப் போராளிகளுக்கென
எந்தவொரு 'வட்ஸ் அப்' குழுவும் இல்லை" என தெரிவித்துள்ளார்.