பசறையில் இடம்பெற்ற விபத்து - தலைமறைவாகிய பாரவூர்தியின் சாரதியை தேடும் பொலிஸார்
பசறையில் இருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து ஒன்று 200 அடி பள்ளத்தில் வீழுந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில்,விபத்து இடம்பெறும் போது பேருந்திற்கு எதிரே பயணித்த பாரவூர்தியின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், சாரதியை தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம் குறித்த விபத்தில் மரணித்தவர்களில், ஒருவரின் சடலத்தை அடையாளம் காண முடியாமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், மரணித்தவர்களில் தம்பதியினரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.அவர்களுள், 9 ஆண்களும், 5 பெண்களும் அடங்குகின்றனர்.அத்துடன் மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் சாரதி உயிரிழந்து விட்டதாக இதற்கு முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தது.சாரதி ஆசனத்தில் சிக்கியிருந்த நபரை வெளியே எடுக்கும் போது அவர் உயிரிழந்து காணப்பபட்டார்.
எனினும் அந்த நபர் சாரதி இல்லை என தற்போது தெரியவந்துள்ளது. மேலும்,வழமையான சாரதி பேருந்தை செலுத்தவில்லை எனவும்,பேருந்தை செலுத்த வேண்டிய சாரதிக்கு பதிலாக மற்றுமொருவர் பேருந்தை செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பேருந்து சாரதி லுணுகல பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய நபர் எனவும் அவர் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் பசறை மற்றும் லுணுகல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. வளைவில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் மோட்டார் வாகன பரிசோதகர்களினால் தொழில்நுட்ப பரிசோதகர்கள் பரிசோதிக்கவுள்ளனர். எனினும் பேருந்து முழுமையாக சேதமடைந்துள்ளமையினால் பரிசோதனை மேற்கொள்வதறகு சில காலமாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.



