பறித்த அதிகாரங்களை மீள வழங்காது தேர்தலை நடத்த கூடாது - விக்னேஸ்வரன் தெரிவிப்பு
மாகாண சபைகளிடமிருந்து மத்திய அரசாங்கம் பறித்த அதிகாரங்களை மீள மாகாண சபைகளுக்கு வழங்காது தேர்தலை நடத்தக் கூடாது என வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபையின் முதலமைச்சரின் செயலாளரும் , பதின்மூன்றாவது திருத்தம் தொடர்பான நிபுணருமான கந்தையா விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று (29.07.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
13 நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் மாகாண சபைகளிடமிருந்து மத்திய அரசுக்கு எடுக்கப்பட்ட அதிகாரங்களை மீள வழங்குவது தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நீதியரசர் விக்னேஸ்வரனும் நானும் கலந்துரையாடினோம்.
நீதிமன்ற தீர்ப்பு
சிலர் மாகாண சபை தேர்தலை உடனடியாக வையுங்கள் என கூறுகின்ற நிலையில் மாகாண சபைகளிடம் இருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீள எடுக்காமல் தேர்தலை நடத்துவதில் பயனில்லை. அவ்வாறு தேர்தலை வைக்குமாறு கூறுபவர்கள் தேர்தலை காரணம் காட்டி வெளிநாடுகளில் இருந்து பணத்தைப் பெறுவதற்காக மாகாண சபை தேர்தலை வைக்குமாறு கோருகின்றனர்.
மாகாண சபையிலிருந்து பறிக்கப்பட்ட பாடசாலைகள், வைத்தியசாலைகள் என்பன மீண்டும் மாகாணத்திடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் மாவட்ட செயலகம் ,பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவையாளர்கள் மீண்டும் மாகாண நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
மாகாணத்திடம் இருந்த கமநல சேவை சகநல அபிவிருத்தி என்ற போர்வையில் மாகாணத்திடமிருந்து மத்திய அரசின் அதிகதரங்களை பறித்துள்ள நிலையில் குறித்த படைப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தால் மாகாணத்திடமே வழங்க வேண்டும் என தீர்ப்பு கூறியும் இதுவரை வழங்கப்படவில்லை.
அதிகாரங்களை மீள பெற முயற்சி
திருகோணமலை ,கன்னியா பிரதேச சபையின் கீழ் இருந்த நிலையில் தற்போது மத்திய அரசாங்கம் அதனை எடுத்துள்ளது. இவ்வாறு மாகாண சபைக்குரிய பல அதிகாரங்கள் மத்திய அரசினால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , அதனை மீள மாகாண சபைகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
மாகாண சபைகள் செயற்பட்ட காலப்பகுதியில் செய்ய வேண்டிய விடயங்களை செய்யாமல் விட்டதன் காரணமாக தமிழ் மக்கள் பல அதிகாரங்களை இழந்துள்ளனர்.
எனவே மாகாண சபைகள் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கத்தை உரிய முறையில் சரி செய்யாமல் தேர்தலை நடத்துவது பயன் இல்லை எனறும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
