முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்பின் மகன் கைது!
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஹமட் லேன் பகுதியில் ஹஸீஸ் போதைப் பொருள் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று (23) மாலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை மாவட்ட முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் என்பவரின் மூத்த மகனான முஹம்மட் மஹ்சூம் அப்துல்லா (31வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் திருகோணமலை பிராந்தியத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த சந்தேகநபரை சோதனையிட்டபோது அவரிடமிருந்து ஹசிஸ் என்றழைக்கப்படும் போதைப்பொருள் ஒரு கிரேம் 170 மில்லி கிராம் மற்றும் ஹெரோயின் 150 மில்லி கிராம் கைப்பற்றப்பட்டதாகவும் பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை போதைப்பொருளுடன் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரை இன்றையதினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
