வவுனியா - பாவற்குளம் பிரதேச வைத்தியசாலையில் நோயாளிகளை அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு
வவுனியா (Vavuniya) - பாவற்குளம் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்கு செல்லும் நோயாளர்களை அலைக்கழிப்பதாக பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குறித்த வைத்தியசாலையானது பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக செல்லும் வைத்தியசாலையாகும்.
குறிப்பாக பாவற்குளம் படிவம் இரண்டு, உளுக்குளம், சூடுவெந்தபுலவு, இராசேந்திரங்குளம், பாரதிபுரம், அவுரந்துலாவ உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து மக்கள் சிகிச்சைக்காக சென்று வருகின்றனர்.
குற்றச்சாட்டுக்கள்
குறித்த வைத்தியசாலையில் வைத்தியர், தாதியர்கள், மருந்தாளர் ஆகியோர் வைத்தியசாலையில் இருந்தும் மதியம் 12 மணி தொடக்கம் 2 மணி வரை தமது சாப்பாட்டு நேரம் எனக் கூறி அந்த நேரங்களில் வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்களை 2 மணிக்கு பிறகு வருமாறு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
இதனால் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் கிராமங்களில் இருந்து வைத்தியசாலைக்கு சென்றவர்கள் ஏமாற்றத்துடன் மீண்டும் வீடு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
அல்லது அங்கிருந்து வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு பணம் செலவு செய்து போக்குவரத்து கஷ்டங்களுக்கு செல்ல வேண்டி இருப்பதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, இது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் மற்றும் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |