ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து வரும் ஆறாம் நிலம்! கண்கலங்க வைக்கும் காட்சிகள் பல
இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதி காலப்பகுதியான 2009 இல் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதும், ஆயிரக்கணக்கானோர் இராணுவத்தினரிடம் சரணடைந்ததும் காலத்தால் அழிக்க முடியாத உண்மையாகும்.
இந்த நிலையில் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட தமது உறவுகளை தேடும் பணியில் தொடர்ச்சியாக, அவர்களின் உறவினர்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு நடுவில் தமது உறவுகளை தேடியபடியே உயிரிழந்தவர்கள் பலர். என்ற போதும் கையளிக்கப்பட்டவர்களின் நிலை இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.
அதைவிடக் கொடுமை அவர்களைக் காணாமல் போனோர் என்று அழைப்பது தான்.
இந்த நிலையில் யுத்தத்தின் பின் ஈழத் தமிழர்கள் தொடர்ச்சியாக அனுபவித்து வரும் வலிகளையும், துயரங்களையும் வெளிப்படுத்தும் முழுநீள திரைப்படமான ஆறாம் நிலம் ஐபிசி தமிழின் தயாரிப்பில், ஐபிசி தமிழ் நடத்திய குறுந்திரைப்பட போட்டிகளில் வெற்றி பெற்ற இயக்குனர் ஆனந்த ரமணனால் இயக்கப்பட்டுள்ளது.
ஈழம் சார்ந்து உருவாக்கப்பட்ட திரைப்படங்களிலோ அல்லது ஈழத்தில் எடுக்கப்பட்ட படங்களிலோ இதுவரை தொடப்படாத ஒரு களம் தொட்டுள்ளது ஆறாம் நிலம்.
போர்க்காலத்தில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் போருக்குப் பிந்திய பத்தாண்டுகளின் பின்னரும் கூட முற்றிலும் அகற்றப்படாத சூழல் நிலவுகின்றது.
அந்த வகையில் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட நிலம், காணாமல்போனோரைத் தேடும் போராட்டம், முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை ஆகியவற்றைச் சுற்றி கதை நகர்கிறது.
முதன்மைப் பாத்திரங்களை ஏற்று நவயுகா மற்றும் மன்மதன் பாஸ்கி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
கணவனைத் தேடும் பெண்ணாக, பிள்ளைக்குத் தாயாக, போருக்குப் பின்னான வாழ்வின் அத்தனை நெருக்கடிகளுக்கும், சமூக அழுத்தங்களுக்கும், மனப் போராட்டங்களுக்கும் முகம் கொடுக்கும் பெண்ணாக நவயுகா தோன்றியுள்ளார்.
அவருடைய பெண் குழந்தையாக தமிழரசி தன்னுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிக்காட்டியுள்ளார்.
முன்னாள் போராளியாக, கண்ணிவெடி அகற்றும் குழுவின் பொறுப்பாளனாக பாஸ்கியும் திரைப்படத்தில் இணைந்துள்ளார்.
கதையின் முடிச்சுகளுக்கு இறுதியில் முடிவு சொல்லாமல்விட்டதால் யதார்த்தம் மிளிர்கிரது.
திரைப்படம் தொடர்பான தனது அனுபவத்தை இயக்குனர் ஆனந்த ரமணன் கூறுகையில்,
“2009ஆம் ஆண்டு சிங்கள இராணுவத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிப் போரின் போது ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இரண்டு தரப்பினருக்கும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது.
உயிர்பிழைத்தோர் ஏராளமானோர் அந்நாட்டு அரசிடம் சரணடைந்தனர். ஆனால் சரணடைந்தவர்கள் பலர் இன்றுவரை என்ன ஆனார்கள் என்றும், எப்படி இருக்கிறார்கள் என்றும் யாருக்குமே தெரியவில்லை.
அவர்களது குடும்பத்திற்குமே இது குறித்து தெரியாது. இதனை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், காணாமல்போன தனது கணவரை கண்டுபிடிக்க அரசிடம் வலியுறுத்திவரும் ஒரு மனைவியின் பார்வையில் 'ஆறாம் நிலம்' எடுக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள வீடுகள், மனிதர்கள், சிதிலமடைந்த இடங்கள் என அனைத்தும் அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு முறையும் அரசு இவர்களை ஏமாற்றுவது என இவர்களின் வலிகளை இப்படம் பேசியுள்ளது.
இப்படம் இன்று மாலை சரியாக ஏழு மணிக்கு ஐபிசி யூடியூப் தளத்தில் வெளியாகிறது” என தெரிவித்துள்ளார்.