தமிழ்த் தேசியத்தைத் தாங்கும் வலிமையான பண்பாட்டு வேர்களில் ஒன்றே ஆடிப்பிறப்பு..
ஈழத்தமிழர்களின் வாழ்வியல் முறைமையில் தொன்றுதொட்டு இடம்பிடித்து வரும் பண்டிகைகளில் ஆடிப்பிறப்பும் ஒன்று. இது வெறுமனே கூழும் கொழுக்கட்டையும் ஆக்கிப் பரிமாறும் பருவகாலச் சடங்கு அல்ல. இது தமிழ்த் தேசியத்தைத் தாங்கி நிற்கின்ற வலிமையான பண்பாட்டு வேர்களில் ஒன்று என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஆடிப்பிறப்பு விழா நேற்று (17.07.2026) தாவடியில் நடைபெற்றது.
இவ்விழாவுக்குத் தலைமை வகித்து உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தேசியம் என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழுகின்ற மக்கள் தங்களின் தனித்துவமான மொழி, பண்பாடு, வாழ்வியல் விழுமியங்களைப் பகிர்ந்துகொண்டு தங்களை ஒரு தனிப்பெரும் சமூகமாக உணரும் கூட்டு ஆன்மா ஆகும்.
இந்தக் கூட்டு அடையாளமே அந்தச் சமூகத்துக்குத் தங்களது அரசியல், பொருளாதார, சமூக எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சுயநிர்ணய உரிமையை வழங்குகின்றது.
ஆனால், எமது அரசியல்வாதிகள் பலரும் தேசியம் என்பதன் முழுமையான பரிமாணங்களைப் புரிந்து கொள்ளாமல் அதனை வெறும் அரசியல் கோசமாக மேடைகளில் முழங்கி வருகின்றார்கள்.
தமிழ்த் தேசியம் பேசுகின்ற அரசியல்வாதிகள் பலரும் மொழி உரிமைக்கும் நில மீட்புக்கும் கொடுக்கும் முதன்மைத்துவத்தைப் பண்பாட்டுப் பாதுகாப்புக்கு வழங்குவதில்லை. ஒரு சமூகத்துக்குத் தேசிய இனம் என்ற தகுதியை வழங்குவதற்கு அது பூர்வீகமாக வாழந்து வருகின்ற நிலமும், அது பேசுகின்ற மொழியும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறுகின்றதோ அந்த அளவுக்கு அதன் பண்பாடும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
நிலமும், மொழியும் ஒரு உடலின் உறுப்புகளுக்கு ஒப்பானது என்றால் பண்பாடு என்பது அந்த உடலைக் கண்ணுக்குத் தெரியாமல் இயக்கிக் கொண்டிருக்கின்ற உயிருக்கு ஒப்பானது. உயிர் பிரிந்த உடல் எவ்வாறு சிதைந்து போகுமோ அது போன்றே ஒரு தேசிய இனம் தன் பண்பாட்டு வேர்களை இழந்து விட்டால் தன் அரசியல் உரிமைகளுக்காகப் போராடும் வீரியத்தை இழந்துவிடும்.
அதன் நிலமும், மொழியும் காலப்போக்கில் அந்நிய ஆக்கிரமிப்புகளுக்கு ஆளாகி அழிந்து போய்விடும். உலக மயமாக்கலும், தென் இலங்கையின் பண்பாட்டுத் திணிப்புகளும் வேகமாக நடக்கும் இக்காலத்தில் ஆடிப்பிறப்புப் போன்ற பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டாடுவதும், அதன் முக்கியத்துவங்களை இளைய தலைமுறையினருக்குச் சேர்ப்பிப்பதும் ஓர் அரசியல் போராட்டம்தான் என்றும் தெரிவித்துள்ளார்.



உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வை... ஆடி மாதத்தில் எதிர்பாராத நிதி ஆதாயத்தினை பெறும் 5 ராசிகள் Manithan