குரங்கு அம்மை தொற்றுக்கான அறிகுறிகளுடன் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு
இந்தியாவின் கேரளாவில் குரங்கு அம்மை தொற்றுக்கான அறிகுறிகளுடன் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய அரபு அமீகத்தில் இருந்து கேரளா வந்த இளைஙர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபிரிக்க நாடுகளுக்கு அப்பால் உலகளவில் பெரும்பாலான நாடுகளில் குரங்கு அம்மை தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் குரங்கு அம்மை தொற்று வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது.
உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 22 வயது இளைஞருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்தது. இதையடுத்து குறித்த இளைஞர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவரது மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. எனினும், முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில் இளைஞர் உயிரிழந்துள்ளார். குரங்கு அம்மை அறிகுறியுடன் இருந்த நபர் உயிரிழந்தது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குரங்கு அம்மை அறிகுறி இருந்த நபருக்கு சிகிச்சையளிப்பதில் தாமதம் ஏற்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.