துறைமுக நகர சமஷ்டி அதிகாரம் கொண்ட தனிநாடு - லக்ஷ்மன் கிரியெல்ல
துறைமுக நகரம் என்பது தனியான சமஷ்டி அதிகாரங்களை கொண்ட பிரதேசம் போன்றது எனவும், அந்த பிரதேசம் சம்பந்தப்பட்ட நிதி அதிகாரங்கள் கூட நாடாளுமன்றத்திற்கு இல்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 25 சட்டங்கள் துறைமுக நகருக்குள் செல்லாது. இதனடிப்படையில் அது ஒரு தனிநாடு.
அரசின் நிதி நிர்வாகத்தை செய்வதில் இலங்கை மத்திய வங்கி, நிதி சபை மற்றும் நிதியமைச்சு என்பன பிரதான நிறுவனங்களாகும்.
இந்த மூன்று நிறுவனங்களும் துறைமுக நகரின் பணிப்பாளர் சபையில் இல்லை.இதன் மூலம் துறைமுக நகரத்தை ஒரு அணிக்கு தேவையான வகையில் நிர்வாகம் செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது தெளிவாகி இருக்கின்றது.
எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பாக எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்றை கோருவோம். அதன் ஊடக இந்த விடயங்களை நாட்டுக்கு வெளிப்படுத்துவோம் எனவும் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.