அரச மட்டப் பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்துகிறோம்: கடற்றொழிலாளர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!
இலங்கை - இந்திய கடற்றொழில் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரச மட்ட பேச்சுவார்த்தையினை முன்னெடுத்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டவேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னராசா தெரிவித்துள்ளார்.
இலங்கை - இந்திய கடற்றொழில் சங்க தலைவர்களுக்கு இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை வவுனியா ஹொவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (26.03.2025) இடம்பெற்றது.
இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை - இந்திய வெளிவிவகார அமைச்சு
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 2016ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற இலங்கை - இந்திய வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இன்று வரை நடைமுறைபடுத்தாமையினால் தமிழ் நாட்டிலும் வடமாகணத்திலும் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே, கடந்த 9 வருடங்களாக நடவடிக்கை மேற்கொள்ளாததையிட்டு இரு நாட்டு கடற்றொழிலாளர்களும் 9 வருடங்களுக்கு பின்பு கலந்துரையாடியுள்ளோம். இந்த கலந்துரையாடல் மூலம் நாம் மிக்க மகிழ்ச்சியடைந்துள்ளோம்.
இரு நாட்டிலும் பாதிக்கப்படுவது கடற்றொழிலாளர்களே. எனவே இதனை தீர்க்க வேண்டிய அவசியத்தினையும் அதற்கான பொறிமுறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளோம்.
இதன் அடுத்த கட்டமாக இலங்கையின் கடற்றொழில் அமைச்சரும் அதிகாரிகளும் அதேபோன்று இந்திய பிரதமர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோர் இந்த பிரச்சினையை அரச மட்ட பேச்சுவார்த்தையாக கொண்டு சென்று அதனூடாக கடற்றொழிலாளர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதை இரு அரசாங்கங்களுக்கும் வலியுறுத்தி முன்வைக்கிறோம்.
அதேபோல தொடர்ச்சியாக இரு நாட்டு கடற்றொழிலாளர்களும் கலந்துரையாடுவதுடன், இரு நாட்டு கடல்வளமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் இருதரப்பும் இணங்கியிருக்கிறது.
அத்துடன் தமிழ் நாட்டின் ஏனைய மாவட்டங்களை சேர்ந்த கடற்றொழிலாளர்களுடனும் கலந்துரையாடி இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான ஆரம்ப முயற்சியாக இந்த பேச்சுவார்த்தை அமைந்துள்ளது.
எனவே, இரு நாட்டு கடற்றொழிலாளர்கள் பிரச்சினைக்கான தீர்வு அரசின் அணுசரணையோடு மிகவிரைவில் எட்டப்படும். எட்டுவோம் என்ற நம்பிக்கை எமக்கு ஏற்பட்டுள்ளது. இது மனிதாபிமானத்தோடு கையாள வேண்டிய விடயம். இந்த கலந்துரையாடல் தொடரும்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |