பலாலி காணி விடுவிப்பு கடந்தகால இணக்கப்பாடுகளை நிறைவேற்ற அநுர அரசுக்கு ஈ.பி.டி.பி வலியுறுத்து!
புதிய இணைப்பு
ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசாங்கம், தனது இயலாமையை மறைக்காமல், காணி விடுவிப்பு தொடர்பில் கடந்தகால அரசாங்கங்களினால் எடுக்கப்பட்ட முடிவுகளையும், கொள்கை ரீதியாக ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாடுகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பலாலி மக்கள் தமக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்கக் கோரி இன்று (13) முன்னெடுத்த தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) கலந்துகொண்டு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.
குறித்த போராட்டக் களத்தில் இருந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஈ.பி.டி.பி கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், தற்போதைய அரசாங்கத்தின் அணுகுமுறை குறித்து தனது விசனத்தை சுட்டிக்காட்டி மேலும் கூறுகையில்
அரசாங்கத்தின் தீர்மானம்
எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை தற்போதைய அரசாங்கத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்காக மானசீகமாக உழைக்க கூடிய யாரும் அரசாங்க பிரதிநிதிகள் யாரும் இல்லாத சூழலில் இவ்வாறான போராட்டங்களுடாக மக்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதேநேரம் கடந்த ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தையாவது தற்போதைய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
இதன்படி பலாலி வீதிக்குக் கிழக்கு பக்கம் அமைந்துள்ள அனைத்துக் காணிகளையும் விடுவிக்க வேண்டும் என்ற ரணில் அரசாங்கத்தின் தீர்மானத்தை, அல்லது எட்டப்பட்ட கொள்கை ரீதியான இணக்கப்பாட்டை தற்போதைய அரசாங்கம் எவ்வித நிபந்தனையுமின்றி நிறைவேற்ற வேண்டும்.
இரட்டை நிலைப்பாடு
அதற்காகவே பலாலி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கும், வாழ்விடத்திற்குமான நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி சாத்வீக முறையில் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த மக்களின் போராட்டத்திற்குத் தார்மீக ரீதியான முழுமையான ஆதரவைத் தொடர்ந்தும் ஈ.பி.டி.பி வழங்கும்.

இதேநேரம் தற்போதைய அரசாங்கம், கடந்த கால அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தினையே முன்கொண்டு செல்கிறது.
குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம், வெளியுறவுக் கொள்கை போன்வற்றை தொடர்கிற தற்போதைய அரசாங்கம், எமது மக்களின் அபிலாசைகள் தொடர்பாக முன்னெடுத்த தீர்மானங்களை கிடப்பில் போடுவது வேதனையளிக்கிறது. இது இந்த அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாட்டை புலப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்- கஜிந்தன்
முதலாம் இணைப்பு
பலாலி மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியின் இன்று(12) நான்காவது தடவையாகவும் முன்னெடுக்கப்பட்டது.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்து கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
போராட்டம்
தமது காணிகளை இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தான் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டனர்.

இதன்போது கொட்டகை அமைத்து போராட்டத்தை முன்னெடுக்க மக்கள் முயற்சித்த போதும் பொலலசார் தடுத்தனர்.
மக்கள் கொளுத்தும் வெயிலில் தொடர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.











நேபாளத்தில் பெரு வெள்ளம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய 8 வயது சிறுவன்: மகனை தேடி அலைந்த தாய் News Lankasri