மகிந்த ஏன் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்... பிரபு எம்.பி வெளியிட்ட தகவல்கள்
எயார் பஸ் மோசடியின் பின்னால் உள்ளவர்கள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக ராஜபக்சர்களின் பெயர்கள் வெளிவந்துள்ளன. இதன் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விசாரணைக்கு அழைக்கப்பட்டார் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட எவரும் தப்பிக்கமுடியாது. இன்று அனைத்து துறைகளும் சுயாதீனமாக செயற்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனதுடன் விசாரணைகள் அனைத்தும் சுயாதீனமாக முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மண்முனை தென் மேற்கு - பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரின் ஒழுங்கமைப்பில் அபிவிருத்திக்குழுக் கூட்டமொன்று நேற்று(14.05.2026) பிரதேச தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்றுள்ளது.
சட்டவிரோத செயற்பாடுகள்
இதன்போது, இந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளதுடன் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்தும் விரைவுபடுத்துதல் தொடர்பாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன் சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்காக முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

சட்ட விரோதமான மதுபான உற்பத்தி மற்றும் சட்ட விரோதமாக மண் கடத்தல் ஆகிய செயற்பாடுகளை தடுப்பது குறித்து இதன்போது ஆராயப்பட்டது. இது தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று கொக்கட்டிச்சோலை நகரில் வீதி புனரமைப்பு செயற்பாடுகளில் ஈடுபட்ட நிறுவனம் முறையாக புனரமைப்பு பணியை செய்யாமல் பாரியளவிலான முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இது தொடர்பில் பூரண விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நிறுவனத்தின் செயற்பாடுகளை தடைசெய்யும் வகையிலான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
வரிப்பண மோசடி
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரபு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இந்த நாட்டிலே கடந்த காலங்களிலே பல ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருக்கின்றன. நாங்கள் ஆட்சி பீடம் ஏறும் போது மக்கள் எங்களிடம் எதிர்பார்த்த ஒரு விடயம் இந்த நாட்டில் இடம்பெற்றிருந்த ஊழல் மோசடிகளை இல்லாமச் செய்வதும், அதேநேரம் ஊழல் மோசடிகளோடு சம்பந்தப்பட்டவர்களை நீதிக்கு முன்னால் கொண்டு வந்து, அவர்களுக்கு உரிய தண்டனைகளை வழங்க வேண்டும் என்பதுமாகும்.
ஊழல் மோசடியற்ற ஒரு நாட்டை உருவாக்குவோம் என்பதையே எங்களது கொள்கையிலும் நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். அந்த அடிப்படையிலே நாங்கள் அந்த விடயத்தை முன்னெடுத்துக்கொண்டு வருகின்றோம். முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராகக்கூட இன்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எதிர்க்கட்சியினர் எங்களுடைய செயற்பாடுகளை அரசியல் பழிவாங்கல் என மக்கள் மத்தியில் பரப்புரைகளை செய்து வருகின்றார்கள். இது எந்த வகையிலும் அரசியல் பழிவாங்கல் கிடையாது.
தாங்கள் உழைத்துக்கொள்வதற்காகவும் தங்களது குடும்பங்களை வளர்த்துக்கொள்வதற்காகவும் பல மோசமான செயற்பாடுகளை கடந்த கால ஆட்சியாளர்கள் செய்து வந்தனர்.
இந்த நாட்டு மக்களின் வரிப்பணத்தை மோசடி செய்கின்ற விதமான பல செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுத்திருக்கின்றார்கள். இது தொடர்பான சட்டரீதியான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உங்களுக்குத் தெரியும் பொலிஸ் துறையும் நீதித்துறையும் இன்று சுயாதீனமாக செயல்பட்டு வருகின்றது.
எயார்பஸ் மோசடி
இந்த நிலையில் எயார்பஸ் மோசடி தொடர்பான ஒரு விடயம் தற்போது பேசுபொருளாக இருக்கின்றது. அது தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் போது அதன் பின்புலத்திலே ராஜபக்சக்கள் இருப்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது. ஆகவே தான் மகிந்த ராஜபக்சவை விசாரணைக்கு அழைத்திருந்தார்கள். ஆனால் அவர் தனக்கு ஆதரவாளர்களாக சிலரை அழைத்து வந்து, தங்களை புகழுரைக்கும் செயற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.

இங்கே எதிர்க்கட்சியில் இருப்பவர்களில் கூடுதலான தரப்பினர் எல்லா விதமான குற்றச் செயல்களிலும் மோசடிகளிலும் சம்பந்தப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். ஆகவே சட்டம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையிலே நாங்கள் செயல்படுகின்றோம்.
அது பெரியவராக இருந்தாலும் சரி சிறியவராக இருந்தாலும் சரி, அனைவருக்கும் சட்டம் சமனாகவே செயல்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத், மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் கிரேஸ்குமார் உட்பட திணைக்கள தலைவர்கள் மற்றும் பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri