போதைப்பொருள் மற்றும் பணத்துடன் ஹெரோயின் வியாபாரி ஒருவர் கைது
மட்டக்களப்பு - வாழைச்சேனை மீன்பிடி வீதியில் வைத்து பிரபல ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி ஒருவரை 3 கிராம் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளதுடன் , குறித்த நபரிடம் இருந்து பணம் மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்வதற்காகப் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் கைப்பற்றி உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் இன்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனையை ஒழிக்கும் பொருட்டு பொலிஸாரினதும் பொதுமக்களினதும் ஒத்துழைப்புடன் இராணுவ புலனாய்வு பிரிவின் வாழைச்சேனை காகித ஆலை பிரிவினர் பல்வேறு தொடர் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு அங்கமாகவே குறித்த கைது இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி 43 வயதுடையவர் எனவும் அவரிடமிருந்து போதைப்பொருள் விற்பனை செய்த 35900 ரூபாய் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவ புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினரோடு இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இவரது மனைவி ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு சிறைச்சாலையில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.