கல்முனையில் தனியார் பேருந்து சாரதியிடம் இலஞ்சம் பெற்ற அதிகாரி கைது!
கல்முனை தனியார் பேருந்து நிலைய பொறுப்பதிகாரி, பேருந்து சாரதி ஒருவரிடம் 200 ரூபா இலஞ்சம் பெற்றுள்ள நிலையில், கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (08.03.2023) முன்னெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாண போக்குவரத்து சபையின் தனியார் பேருந்து நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவரும் குறித்த நபர், பேருந்து நிலையத்திலிருந்து போக்குவரத்து அனுமதிப் பத்திரம் இல்லாது, போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதற்காக பேருந்து சாரதிகளிடம் தொடர்ச்சியாக இலஞ்சம் பெற்று வருவதாக இலஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முன்னிலை
இதனையடுத்து, கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் நடத்துநருக்கு வழங்கிய ஆலோசனைக்கமைய, சம்பவ தினமான நேற்றைய தினம் சாரதியிடம் 200 ரூபா இலஞ்சமாகப் பேருந்து நிலைய பொறுப்பதிகாரி பெற்றுள்ளார்.
இதன்போது, அங்கு மாறு வேடத்தில் சென்ற இலஞ்ச ஒழிப்பு பிரிவினர், அவரைக் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரைக் கொழும்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.