பதின்ம வயது இளைஞன் ஓட்டிய கெப்வண்டி விபத்து
பதின்ம வயது இளைஞன் ஒருவனால் அதிவேகத்தில் ஓட்டிச் செல்லப்பட்ட கெப் வண்டியொன்றில் மோதி விபத்துக்குள்ளான சிறுமியொருவரின் கால் துண்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் மொனராகலை, சியம்பலாண்டுவ பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய சிறுவன்
மொனராகலை பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதான இளைஞன் ஒருவன் அங்கிருந்து ஒப்பேகொட பிரதேசத்துக்கு கெப் வண்டியொன்றில் அதிவேகமாகப் பயணித்துள்ளான்.
அதன்போது எதிர்த்திசையில் இருந்து வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் கெப் வண்டி மோதியதன் காரணமாக சிரிகல, கிரிமண்டல மாவத்தை பிரதேசத்தில் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த அப்பா மற்றும் 14 வயதுச் சிறுமி இருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியின் ஒரு கால் அகற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய சிறுவன் இலகுரக வாகன ஓட்டிகளுக்கான பயிலுனர் அனுமதிப்பத்திரத்தை கொண்டு கனரக வாகனம் ஓட்டிச் சென்றுள்ளமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எனினும் விபத்தை ஏற்படுத்திய சிறுவன் பராயமடையாத வயதுப் பருவத்தில் இருப்பதை கவனத்தில் கொண்டு மொனராகலை நீதிமன்றம் குறித்த சிறுவனைப் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.