பாதாள உலகக்குழுத் தலைவரை பாதுகாக்க கோடிக்கணக்கான பணம் செலவிடும் அநுர அரசு
இலங்கையில் மிகவும் ஆபத்தான நபராக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பாதாள உலகக்குழுத் தலைவருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக பெருந்தொகை பணத்தை அரசாங்கம் செலவு செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழுவின் தலைவருமான ஹரக் கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக, 2 ஆண்டுகளுக்கும் மேலாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பொது மக்களின் வரிப்பணம்
அவரது வழக்கறிஞர் உந்துல் பிரேமரத்ன, அவரது தடுப்புக்காவலுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணையத்திற்கு ஒரு கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
கடிதத்தில், ஹரக் கட்டா சுமார் 2 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்களாக தடுப்புக்காவலில் இருப்பதாகவும், வரலாற்றில் எந்த சந்தேக நபரும் இவ்வளவு நீண்ட காலமாக தடுப்புக்காவலில் இருந்ததில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபருக்காக 87 அதிகாரிகள் ஒதுக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் வரிப் பணத்தில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை அவரது தடுப்புக் காவலுக்காக மாதாந்தம் செலவிடப்படுவதாகவும் வழக்கறிஞர், மனித உரிமைகள் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார்.




