அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 8 பேர் புத்தளத்தில் கைது
வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 8 பேர் புத்தளம், கருவெலச்செவ பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவின் பாலமோட்டை, குஞ்சுக்குளம், கொந்தக்காரங்குளம், நெடுங்கேணி, கீரிசுட்டான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 8 பேர் வவுனியாவில் இருந்து பேருந்து மூலம் புத்தளம் சென்று அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம், புத்தளம், கருவெலச்செவ பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது அவர்கள் சட்டவிரோத ஆட்கடத்தல்காரார்கள் மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டுள்ளதாகவும், அதற்காகவே புத்தளம் வருகை தந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரரைணகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, வவுனியாவில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் இருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் பசார் வீதியில் மார்ச் மாதம் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில்,நொச்சியாகம பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.