தப்பிச் சென்ற குற்றவாளிகளுக்கு எதிராக பொலிஸாரின் அதிரடி நகர்வு..! 6,000 மில்லியன் சொத்துக்கள் முடக்கம்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த 66 சந்தேகநபர்கள் 2024 செப்டெம்பர் 21ஆம் திகதி முதல் இதுவரை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான 113 விசாரணைகளுடன் தொடர்புடைய சுமார் 6,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் இந்தக் காலப்பகுதியில் முடக்கப்பட்டுள்ளன.
சிவப்பு அறிவித்தல்கள்
இதன்படி, 102 சந்தேகநபர்களுக்குச் சொந்தமான 5,423 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவை எனவும், மூன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்குச் சொந்தமான 209 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரமிட் மோசடி, சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான குற்றங்களுடன் தொடர்புடைய எட்டு சந்தேகநபர்களுக்குச் சொந்தமான 367 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.

முடக்கப்பட்ட சொத்துக்களில் 2 கிலோ 140 கிராம் தங்கம், 136 ஏக்கர் காணிகள், 55 வீடுகள் மற்றும் 142 வாகனங்கள் அடங்குவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
2024 செப்டெம்பர் 21ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட 66 சந்தேகநபர்களில் 28 பேருக்கு சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் (Red Notices) பிறப்பிக்கப்பட்டிருந்தன. ஏனைய 38 சந்தேகநபர்கள் சிவப்பு அறிவித்தல்கள் இன்றி நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
பொலிஸ் அறிக்கைகள்
இதேவேளை, 2024 செப்டெம்பர் மாதத்திற்குப் பின்னர் சந்தேகநபர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக இன்டர்போல் ஊடாக 110 புதிய சிவப்பு அறிவித்தல்கள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த ஒகஸ்ட் 18ஆம் திகதி வரையில் இலங்கை பொலிஸாரால் பெறப்பட்டு நடைமுறையில் உள்ள மொத்த சிவப்பு அறிவித்தல்களின் எண்ணிக்கை 236 ஆகும்.

அவற்றில் 96 சிவப்பு அறிவித்தல்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்காக பெறப்பட்டுள்ளன.
தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களில் 35 பேர் தங்கியுள்ள நாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, 18 சந்தேகநபர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்திலும், 11 பேர் இந்தியாவிலும் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ரஷ்யா, கனடா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் தலா ஒரு சந்தேகநபர் வீதம் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.