உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60 ஆவது ஆண்டு விழா இலங்கையில் - ஜனாதிபதியின் பணிப்புரை
உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60 ஆவது ஆண்டு விழா மற்றும் 11 ஆவது பொதுச் சபையின் 2 ஆவது நிறைவேற்றுக் குழுக் கூட்டம், எதிர்வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 2 வரை இலங்கையில் நடைபெறவுள்ளன.
அதன் ஏற்பாட்டு நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல் நேற்றுமுன்தினம்(24) செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி பணிப்புரை
உள்நாட்டு, வெளிநாட்டுத் தேரர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள இந்த விழாவிற்கு தேவையான அரச அனுசரணை வழங்க புத்த சாசன அமைச்சர், ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதிநிதி, பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ்மா அதிபர் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

1966 ஆம் ஆண்டு இலங்கையில் முதன்முதலில் நிறுவப்பட்ட இந்த சர்வதேச பௌத்த அமைப்பின் விழாவை, அது நிறுவப்பட்ட நாட்டில் நடத்துவது ஒரு தனித்துவமான மைல்கல் என்று ஏற்பாட்டுக் குழு சுட்டிக்காட்டியது.
தேரவாதம், மகாயானம் மற்றும் வஜ்ராயனம் ஆகிய அனைத்து பௌத்த மரபுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 50 நாடுகளைச் சேர்ந்த சுமார் 600 பிரதிநிதிகள், இந்த நிகழ்வுக்காக இலங்கைக்கு வருகை தரவுள்ளதுடன், மூன்று நிகாயாக்களைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் உட்பட 500 இந்நாட்டுத் தேரர்களின் பங்கேற்புடன் இந்த விழா நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்விற்கு பூட்டான் மன்னர் உட்பட பௌத்த நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு அழைப்பு விடுக்க எதிர்பார்க்கப்படுகிறது.
சமய அனுஷ்டானங்கள்
இதன் ஆரம்ப நிகழ்வு, நவம்பர் 28 ஆம் திகதி கொழும்பு, நாகானந்த பௌத்த பல்கலைக்கழகத்தில் நடைபெறும். நிறைவேற்றுக் குழுக் கூட்டம் மற்றும் கல்வி மாநாடு நவம்பர் 29 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

உலக அமைதிக்காக அநுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதியில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சி நவம்பர் 30 ஆம் திகதி மாலை நடைபெறும். டிசம்பர் முதலாம் திகதி ருவன்வெளி சேய மற்றும் கண்டி தலதா மாளிகையை மையமாகக் கொண்டு சமய அனுஷ்டானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
“வஸ்” காலம் முடிந்த பிறகு நடைபெறும் இந்த விழா, இலங்கையில் பௌத்த மறுமலர்ச்சி குறித்து உலகிற்கு சிறந்த செய்தியை வழங்கும் என்றும், நாட்டின் சுற்றுலாத் துறையின் மேம்பாட்டிற்கு பெரிதும் பங்களிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த ஆண்டு நிறைவு நிகழ்வை தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக ஏற்பாடு செய்வதன் அவசியத்தை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கு அரசு முழு ஆதரவையும் வழங்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், நியமிக்கப்படும் விசேட குழுவினால் அரசாங்கத் தரப்பு மற்றும் ஏற்பாட்டுக் குழு நிறைவேற்ற வேண்டிய பணிகளை உடனடியாக அடையாளம் கண்டு, எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிடுமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி, அதன் மூலம் இலங்கையின் விருந்தோம்பல் குறித்து மிகவும் சிறந்த செய்தியை முழு உலகிற்கும் எடுத்துக்காட்ட முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இராஜதந்திர அழைப்பு
வெளிநாட்டுத் தேரர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்நாட்டிற்கு வருகை தரும்போதும், புறப்பட்டுச் செல்லும்போதும் விமான நிலையத்தில் சிறப்பு நுழைவாயில்களை நிறுவுதல் உள்ளிட்ட வசதிகளை வழங்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

மேலும், நிகழ்ச்சி நடைபெறும் நாகானந்த பௌத்த பல்கலைக்கழகத்திற்குச் சென்று, அதன் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை ஆராய்ந்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, உலகின் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளின் பங்கேற்பை உறுதி செய்வதற்காக முறையான இராஜதந்திர அழைப்புகளைச் செய்வதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் பௌத்த மறுமலர்ச்சியை உலகிற்கு மீண்டும் உறுதிப்படுத்தவும், நாட்டின் கௌரவத்தை அதிகரிக்கவும் இந்த நிகழ்வு வழங்கும் வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.
ருஹுணு பல்கலைக்கழகத்தின் வேந்தர், உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் உப தலைவர், கலாநிதி வண, அக்குரெட்டியே நந்த நாயக்க தேரர், நாகானந்த பௌத்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாக் குழுவின் தலைவர் கலாநிதி வண, போதாகம சந்திம நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே உட்பட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri