நல்லூரில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
நல்லூர் ஆலய விசேட உற்சவங்களில் 600 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு பொலிஸாரால் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏபிஎஸ் ஜெயமகா தெரிவித்துள்ளார்.
விசேட பாதுகாப்பு
நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவம் சிறப்பாக இடம் பெற்று வரும் நிலையில் எதிர்வரும் வாரம் நல்லூர் ஆலயத்தில் விசேட உற்சவங்கள் இடம்பெறவுள்ளன.
இந்த நிலையில் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு வருகை தரும் பெருமளவான பக்தர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டும் திருட்டுக்களை தடுக்கும் முகமாகவும் வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களில் இருந்து விசேட பொலிஸ் அணியினர் நல்லூர் ஆலய பாதுகாப்பிற்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.
சிவில் மற்றும் சீருடையில் சுமார் 600 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கோரிக்கை
அத்துடன் தென்பகுதி மற்றும் இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருந்து திருட்டுடன் தொடர்புடைய பல்வேறு சந்தேக நபர்களை இனங்காணக்கூடிய பொலிஸ் அணியொன்றும் நல்லூர் ஆலய உற்சவத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக ஏற்கனவே பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் தொடர்பிலான புகைப்படங்களையும் ஆலய நுழைவாயில்களில் காட்சிப்படுத்தவுள்ளதாகவும் அவ்வாறு புகைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டவர்கள் யாராவது ஆலய வளாகத்தில் இனம் காணப்பட்டால் பொதுமக்கள் உடனடியாக போலிஸாருக்கு தகவல்களை வழங்குவதன் மூலம் உரிய சந்தேக நபர்களை விரைவில் கைது செய்யக் கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே பொலிஸாரினால் பல்வேறுபட்ட வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் பொதுமக்கள் குறித்த விடயத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.




