பிரித்தானியாவில் நாய் கடி தாக்குதலில் 6 பேர் படுகாயம்
பிரித்தானியா லீசெஸ்டர்ஷைரில் நாய் கடி தாக்குதலுக்கு இலக்காகி 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,கடந்த வியாழக்கிழமை அதிகாலை பார்டன் ஹில்லின் பேவரேஜ் லேன் பகுதிக்கு அருகே நாய் தாக்குதல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இந்தநிலையில், காலை 6.30 மணிக்கு வந்த முதல் அழைப்பிற்கு பதிலளித்த பொலிஸார், சம்பவ இடத்தில் பாதிக்கப்பட்ட நபரை கண்டுபிடித்தனர். ஆனால் தாக்குதலில் ஈடுபட்ட நாய் எதையும் அங்கு பார்க்கவில்லை.
நாய் கடி தாக்குதல்
பின்னர் அதே பகுதியில் காலை 7.44 மணிக்கு வந்த இரண்டாவது அழைப்புக்கு பதிலளித்த பொலிஸார், சம்பவ இடத்தில் நாய் கடியால் பாதிக்கப்பட்ட 3 பேரை கண்டுபிடித்தனர்.
மேலும் அப்பகுதியில் சுற்றித்திரிந்த 2 காகசியன் ஷெப்பர்ட் வகை நாய்களை கண்டுபிடித்தனர். அவை பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நாய் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
இருப்பினும் இந்த சம்பவத்திற்கு பிறகு மேலும் இரண்டு பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்ததை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது.
விசாரணை
இந்த சம்பவத்தில் 17 வயது இளம்பெண் மற்றும் 47 வயது ஆண் ஆகிய இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது பொது இடத்தில் ஆபத்தான நாய்களை வைத்திருந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், விசாரணை தொடர்வதால் கைது செய்யப்பட்ட இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



