ஊரடங்கு நேரத்தில் கடைகளில் வியாபாரம் மேற்கொண்ட ஆறு பேர் கைது
திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு நேரத்தில் கடைகளில் வியாபாரம் மேற்கொண்ட ஆறு பேரை இன்று கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவிலிருந்து எதிர்வரும் 30ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கந்தளாய், பேராறு, வட்டுக்கச்சி மற்றும் மத்ரஸா நகர் போன்ற பகுதிகளில் கடைகளைத் திறந்து இவர்கள் வியாபாரம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போதே இவர்கள் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.
சந்தேகநபர்கள் ஹோட்டல்கள், சில்லறைக் கடைகளைத் திறந்து வியாபாரம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களை தடுத்து வைத்துள்ளதோடு அவர்களை கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




