புதுக்குடியிருப்பில் நீண்ட நாள் சைக்கிள் திருடர்கள் கைது (Video)
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் நீண்ட நாட்களாக இடம்பெற்ற மிதிவண்டி திருட்டு சம்பவங்கள் தொடர்பில் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 15 மிதிவண்டிகளும் மீட்கப்பட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மிதிவண்டிக்கான விலையும் அதிகரித்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாட்டினால் மக்கள் அதிகளவில் மிதிவண்டி பாவனையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.இந்நிலையில் பாடசாலை மாணவர்கள் தொடக்கம் விவசாயிகள் வரையில் மிதிவண்டியினை வாங்கி வருகின்றார்கள்.இதனால் அதிகளவு கேள்விகள் காணப்படுவதால் மிதிவண்டிகளை திருடி மாற்றம் செய்து விற்பனை செய்யும் திருடர்களின் செயற்படுகளும் அதிகளவில் பதிவாகி வருகின்றது.
திருடர்களை கைது செய்ய நடவடிக்கை
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பல பகுதிகளில் மிதிவண்டி திருட்டில் ஈடுபட்டு அவற்றை விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் தொடர்பில் திருட்டில் ஈடுபட்ட வேளை சி.சி.ரி.வி கமராவில் பதிவான காட்சிகளை வைத்து திருடனை அடையாளம் கண்ட பொலிஸார் 29.06.22 அன்று கைது செய்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.கேரத் தலைமையிலான (PS-60910)ஜெயசிங்க, (PC-70537) குணவர்தன,(PC-88509) பிரதீபன்,(PC-96676) டினேஸ்ராஜ்,(PS-62025)தயானந்த,(PS-93561)அஸ்வர் கொண்ட குழுவினர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், கைவேலி,வேணாவில் பகுதி சிவில் பாதுகாப்பு குழு அங்கத்தவர்களின் ஒத்துழைப்புடன் திருடர்களை கைது செய்யும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கைது
மிதிவண்டி திருட்டில் ஈடுபட்ட ஒருவரை கைவேலி பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவருடன் தொடர்புடைய கைவேலி பகுதியினை சேர்ந்த மூவரை கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் இருந்து 13 மிதி வண்டிகள் மீட்கப்பபட்டுள்ளன மற்றும் ஒரு இடத்தில் மிதிவண்டி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம், உரும்பிராய் கிழக்கு பகுதியினை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு மிதிவண்டி திருட்டு சம்பவத்தின் உடையார் கட்டு குரவில் பகுதியில் வசிக்கும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவர்களிடம் இருந்து 15 மிதிவண்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
இவர்களை நாளை 01.07.2022 முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில்
முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.