குச்சவெளி பகுதியில் 548.5 ஏக்கர் விடுவிப்பு
திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டிருந்த 548.5 ஏக்கர் நிலம் விவசாய நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்பட்டுள்ளது.
குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் 10432 ஏக்கர் நிலத்தை விடுவிக்குமாறு கோரப்பட்டு வந்த நிலையில் 548.5 ஏக்கர் நிலமே விடுவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் 1. கள்ளம்பத்தை - புளியடிக்கண்டல் 175 ஏக்கர்
2. கள்ளம்பத்தை - கள்ளம்பத்தை வெளி 163 ஏக்கர்
3. காசீம் நகர் -இலந்தைகுளம் 135 ஏக்கர்
4. கும்புறுபிட்டி வடக்கு - மடுவாகுளம் 20 ஏக்கர்
5. கும்புறுபிட்டி வடக்கு - கல்லிப்பிளவு 17 ஏக்கர்
6. புல்மோட்டை 01 - பழையஇறக்கம் 20 ஏக்கர்
7. புல்மோட்டை 04 - சூதயன்நகர் 18.5 ஏக்கர் ஆகிய பகுதிகளில் நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.
மேய்ச்சல் தரை
திருகோணமலை மாவட்டத்தில் யுத்தம் நிறைவுற்றதற்கு பின்னர் கிட்டத்தட்ட 2012ஆம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் காலாகாலமாக விவசாயம் மேற்கொண்டுவந்த மற்றும் மேய்ச்சல் தரையாக பயன்னடுத்தப்பட்டு வந்த பல ஆயிரம் ஏக்கர் காணிகள் வன வள பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களங்களால் வர்த்தமானி அறிவித்தல் இன்றி கையகப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மக்களுடைய, மக்கள் தொடர்ச்சியான பயன்படுத்திவந்த அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு அவசியமான காணிகள் என்றதன் அடிப்படையில் 41361 ஏக்கர் காணியை விடுவிக்கக்கோரி வனவள பாதுகாப்பு திணைக்களத்திடம் பல வருட காலமாக அதிகாரிகளினால் கோரிக்கை முன் வைக்கப்பட்டு வந்தபோதும் எதுவும் சாத்தியமாகவில்லை.
இருப்பினும் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 10432 ஏக்கர் விடுவிக்க கோரி வந்த நிலையில் தற்போது 548.5 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று ஏனைய இடங்களிலும் மக்களுடைய நிலங்கள் விடுவிக்கப்பட்டு மக்களினதும், நாட்டினதும் பொருளாதார வளர்ச்சிக்காக அவை பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் புத்திஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.




