யாழ் நுகர்வோர் பாதுகாப்பு பாவனை அதிகார சபையினால் 53 வழக்குகள் தாக்கல்
யாழ். மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு பாவனை அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வுக்காகக் கடந்த மூன்று வாரங்களில் 45 வழக்குகள் உள்ளடங்கலாக நேற்று மாத்திரம் 08 வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் மொத்தமாக 53 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு பாவனை அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அத்தியாவசியப் பொருட்களின் அரசாங்கத்தின் விலை நிர்ணய அடிப்படையின்றி பொருட்களை அதிகவிலை நிர்ணய விற்பனையில் செய்தல் தொடர்பில் ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு இன்று மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மாகாணங்கள் மட்டத்தில் அமுலாக்கப்பட்டுயிருக்கும் ஊரடங்கு சட்டத்தின் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் இதர உணவுப்பண்டங்களை விற்பனை செய்யாது மறைத்து வைப்பது தொடர்பிலும் அதனை விற்பனை விலையினை அதிகரித்துச் செய்தல், மற்றும் காலாவதியாகி பொருட்களை விற்பனை செய்வது தொடர்பில் யாழ் மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு பாவனை அதிகார சபையினால் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டன.
அவற்றில் மூன்று வார காலப்பகுதியில் யாழ் மாவட்டத்திலிருந்து 45 வழக்குகள் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை விட நேற்று மாத்திரம் 08 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் யாழ் நீதிமன்ற வழக்குகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன. தாமதமாகவே வழக்குகள் இடம்பெறுகின்றது.
மேலும் நுகர்வோர் பாவனை அதிகாரசபை அலுவலக அதிகாரிகள், நிலுவைகள் அளவை உத்தியோகத்தர்கள் இணைந்த களப்பரிசோதனைகளும் முன்னெடுத்து வருகின்றனர். எனவே மக்களுக்கு ஏற்ப விலைவாசியின் அடிப்படையில் பொருட்களை விற்பனை செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொது முடக்கத்திலும் மக்கள் தமது கவனக்குறைவின்றி சென்று வருவதையும் அவதானிக்க முடிகின்றது. தங்களையும், குடும்ப உறவுகளையும் பாதுகாக்கும் வண்ணம் பொதுமக்களை நடந்துகொள்ளும்படி விநயமாகக் கேட்டுக்கொள்ளுகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.