தனியார் துறை ஊழியர்களுக்கும் 5000 ரூபா கொடுப்பனவு! - ஜனாதிபதிக்கு கடிதம்
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபா கொடுப்பனவை தனியார் துறையினருக்கும் வழங்குவதற்கு அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டுமென கோரி ஒன்றிணைந்த நிறுவனங்களின் தொழிற்சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு இந்த விடயத்தை பரிசீலிக்குமாறு குறித்த தொழிற்சங்கம் ஜனாதிபதியை கோரியுள்ளது.
வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் போது ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கமும் நன்மைகளைப் பெற வேண்டும் என்றும், தனியார் துறை ஊழியர்களுக்கும் 5 ஆயிரம் ரூபா வழங்குவது அரசின் பொறுப்பு என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் உற்பத்தி செயன்முறையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் வலுவில் 80 வீதம், தனியார் துறையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது எனவும் ஒன்றிணைந்த நிறுவனங்களின் தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அவர்களில் 60 வீதமானோர் 25,000 க்கும் குறைவாகவே வருமானம் ஈட்டுகின்றனர் என்று கூறியுள்ள குறித்த தொழிற்சங்கம், 05 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குவதன் மூலம் தனியார் துறை ஊழியர்கள் எதிர்நோக்கும் துயரத்தை ஒரளவேனும் நிவர்த்தி செய்ய முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.