வவுனியா மாவட்டத்தில் 50 வீதமானவர்களிற்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
வவுனியா மாவட்டத்தில் நேற்றுவரை 60 வயதிற்கு மேற்பட்டோர், 30 வயதிற்கு மேற்பட்டோர், சுகாதார பிரிவினர், ஆசிரியர்கள் உட்பட வவுனியா மாவட்டத்தில் 50 வீதமானவர்களிற்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதோடு இன்றையதினமும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலய மண்டபத்தில் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் இன்று (04) காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மாலை வரை இடம்பெற இருக்கிறது.
இதில் அதிகளவான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தடுப்பூசியினை செலுத்திச் செல்வதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
மேலும் இந்நிலையத்தில் இன்றையதினத்தில் 1000 தடுப்பூசிகளின் முதல் டோஸ் பொதுமக்களிற்குச் செலுத்தப்படவுள்ளதோடு நேற்று வரை வவுனியா மாவட்டத்தில் 62000 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
அத்தோடு 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், ஊடகவியலாளர்கள் என 1025 பேருக்குக் கடந்த மாதம் 6ம் திகதி சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் வன்னி பிராந்திய இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கேமந்த பண்டாரவின் ஒத்துழைப்புடன் வழங்கப்பட்டிருந்தது.
இதற்கான இரண்டாவது டோஸினை வழங்குவதற்கான செயற்பாடுகள் சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 20000 ஆயிரம் பேரும், 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் 94000 பேரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.