அனுமதிப் பத்திர விதிகளை மீறி மணல் ஏற்றிய ஐந்து சந்தேகநபர்கள் கைது
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அனுமதிப் பத்திர விதிகளை மீறி மணல் ஏற்றிய ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஐந்து உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேளாமைச்சேனை பகுதியில் அனுமதிப்பத்திர விதிகளை மீறி மணல் ஏற்றுவதாக வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸார் விசேட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது ஐந்து உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டதுடன், ஐந்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் சட்டவிரோத மர கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனைத் தடுப்பதற்கு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் விசேட குழு ஒன்று செயற்பட்டு வருவதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்துள்ளார்.