அமெரிக்க சிஐஏ அதிகாரி வீட்டில் 40 மில்லியன் டொலர் தங்கக் கட்டிகள் பறிமுதல்!
அமெரிக்காவின் மத்திய உளவு முகமையான சிஐஏ அமைப்பின் முன்னாள் உயர் அதிகாரி டேவிட் ரஷ் என்பவரது வீட்டில் இருந்து 40 மில்லியன் டொலர் (சுமார் 330 கோடி ரூபாவுக்கும் மேல்) மதிப்புள்ள நூற்றுக்கணக்கான தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அரசுப் பணத்தைத் திருடிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிஐஏ மற்றும் எஃப்பிஐ அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு விசாரணை
சிஐஏ அமைப்பிற்குள் நடத்தப்பட்ட உள்நாட்டு விசாரணைக்குப் பிறகு, அதன் இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப் இந்த விவகாரத்தை எஃப்பிஐ விசாரணைக்கு மாற்றினார். இதனைத் தொடர்ந்து கடந்த மே 19 அன்று டேவிட் ரஷ் கைது செய்யப்பட்டார்.
எஃப்பிஐ தாக்கல் செய்துள்ள விசாரணை அறிக்கையின்படி, டேவிட் ரஷ் கடந்த 2009 முதல் 2026 மே மாதம் வரை அமெரிக்க அரசுக்குச் சொந்தமான மதிப்புமிக்கப் பொருட்களைத் திட்டமிட்டுத் திருடியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

மேலும், அவர் தனது கல்வித் தகுதி மற்றும் இராணுவப் பின்னணி குறித்துப் பல பொய்களைக் கூறி அரசாங்க வேலைகளைப் பெற்றுள்ளார்.
கிளெம்சன் பல்கலைக்கழகம் மற்றும் ரென்சீலர் பாலிடெக்னிக் நிறுவனத்தில் பட்டம் பெற்றதாகவும், கடற்படை விமானியாக இருந்ததாகவும் அவர் தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பல மில்லியன் டொலர்
கடந்த 2025 நவம்பர் முதல் 2026 மார்ச் வரையிலான காலகட்டத்தில், "அலுவலக வேலை நிமித்தமான செலவுகளுக்காக" என்று கூறி, பெரும் தொகையிலான வெளிநாட்டு நாணயங்களையும், பல மில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கக் கட்டிகளையும் அரசிடமிருந்து டேவிட் ரஷ் பெற்றுள்ளார்.
ஆனால், அதற்கான செலவுக் கணக்குகளையோ அல்லது அந்தத் தங்கம் எங்குள்ளது என்ற விபரத்தையோ அவர் சமர்ப்பிக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிஐஏ அதிகாரிகள் சோதனையிட்ட போது விபரம் வெளிச்சத்திற்கு வந்தது.

மே 18 அன்று எஃப்பிஐ அதிகாரிகள் அவரது வீட்டில் நடத்திய அதிரடி சோதனையில், தலா 1 கிலோ எடையுள்ள 303 தங்கக் கட்டிகள் (மதிப்பு $40m மேல்), 2 மில்லியன் டொலர் ரொக்கப் பணம் மற்றும் 35 ஆடம்பர ரோலக்ஸ் (Rolex) கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அமெரிக்க அரசாங்கத்தின் பெரும்பாலான தங்கம் அதன் கருவூலத்திலும், பெடரல் வங்கியிலும் இருப்பு வைக்கப்படுகிறது. இருப்பினும், உளவுத்துறை மற்றும் இராணுவ இரகசிய நடவடிக்கைகளின் போது, உள்ளூர் வங்கிகள் செயல்படாத சூழலிலோ அல்லது பணப் பரிவர்த்தனைகளை வெளியில் தெரியாமல் ரகசியமாக வைக்கவோ தங்கம் பயன்படுத்தப்படுகிறது.
இந்தச் சாதகமான சூழலைப் பயன்படுத்தியே டேவிட் ரஷ் இந்த மெகா மோசடியில் ஈடுபட்டுள்ளார் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தற்போது வர்ஜீனியாவின் அலெக்ஸாண்ட்ரியா கூட்டாட்சி நீதிமன்றக் காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.