சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது
திருகோணமலை - அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு சந்தேகநபர்கள் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் நான்கு உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கந்தளாய் மற்றும் அக்போபுர பகுதியைச் சேர்ந்த 23, 27, 33 மற்றும் 30 வயதுடைய நால்வரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்போபுர சீனி ஆலை நான்காவது வலயத்தில் சந்தேகநபர்கள் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட போது விசேட பொலிஸ் அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சூரியபுர விசேட பொலிஸ் அதிரடைப்படையினாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சிக்கியுள்ளனர்.
சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.