திருகோணமலை வெருகல் படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு
திருகோணமலை - வெருகல் படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு வெருகல் – பூநகர் பகுதியில் இன்று வியாழக்கிழமை (12) மிகவும் உணர்வுபூர்வமான முறையில் நினைவுகூறப்பட்டது.
வெருகல் -ஈச்சிலம்பற்று முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை ஏற்றிவந்த அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு 39 வருடங்களாகியும் நீதி கிடைக்காத நிலையில் குறித்த நினைவேந்தலை பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
நினைவேந்தல் நிகழ்வில் முதலில் ஆத்ம சாந்தி வேண்டிய பூஜைகள் இடம்பெற்று பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.
நினைவஞ்சலி
இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உருவப் படங்களுக்கு விளக்கேற்றி மலர்தூவி ஆத்மா சாந்தி வேண்டி நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை சேருவில பகுதியில் இருந்து ஈச்சிலம்பற்று நோக்கி எடுத்து வரும்போது மகிந்தபுர பகுதியில் வைத்து மூன்று அரச அதிகாரிகள் உட்பட 21பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த வெருகல் படுகொலையின் 39ஆவது நினைவுதினம் இன்றாகும். (12.06.2025) அன்று நாட்டில் நிலவிய யுத்தசூழல் காரணமாக வெருகல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மக்கள் ஈச்சிலம்பற்று, பூமரத்தடிச்சேனை மற்றும் மாவடிச்சேனை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்தார்கள்.
படுகொலை
இவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் அரசாங்க சேருவில பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக வழங்கி வந்தது.
இந்நிலையில் 1986ம் ஆண்டு ஜுன் மாதம் 12ம் திகதி நிவாரணங்களை வண்டில்களை கொண்டுவந்து ஏற்றிச் செல்லுமாறு அப்போது மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த வர்ணசூரியவினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் முகாம்களுக்கு பொறுப்பான அரச அதிகாரிகள் மூவர் உட்பட 21பேர் மாட்டு வண்டில்களுடன் சேருவில நோக்கிச் சென்றார்கள்.
அங்கிருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு ஈச்சிலம்பற்று நோக்கி வரும்போது மகிந்தபுரவில் வைத்து ஆயுதம் தாங்கிய நபர்களினால் இவர்கள் வழிமறிக்கப்பட்டு பிரதான வீதியில் இருந்து 50 மீற்றர் தூரம் அழைத்துச் செல்லப்பட்டு முழங்காலில் இருக்க வைத்து படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
இதில் மூன்று அரச அதிகாரிகள் உட்பட 21பேர் படுகொலை செய்யப்பட்டதோடு மூன்றுபேர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் உயிர் தப்பியிருந்தார்கள்.



புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri
