அடுத்த 36 மணிநேரத்தில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! கடல் அலைகள் உயரக்கூடும் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அடுத்த 36 மணி நேரத்திற்கான வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலின் வானிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இன்று (19) பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பலத்த காற்று
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டைச் சுற்றியுள்ள பல கடல் பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பலத்த காற்றும், கொந்தளிப்பான கடல் நிலையும் காணப்படலாம் என திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதேவேளை ஏனைய கடல் பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.
திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம்.
இதேவேளை திருகோணமலையிலிருந்து பொத்துவில் வரையான கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். ஏனைய கடல் பகுதிகள் மிதமான அளவில் இருக்கும்.

கணிசமான கனமழை பெய்யக்கூடும்
மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பகுதிகளில் அலைகளின் உயரம் சுமார் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடும்.

அதன்படி, மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், சில இடங்களில் 50 மி.மீ.க்கு மேல் கணிசமான கனமழை பெய்யக்கூடும் என கூறப்படுகிறது.
வடக்கு மாகாணத்திலும், அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல சுற்று மழை பெய்யும். ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலால் உண்டாகும் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.