வெளிமாவட்டத்தில் 36 கோவிட் பூதவுடல்கள் தகனம்! - வைத்தியர் சத்தியமூர்த்தி
யாழ். போதனா வைத்தியசாலையிலிருந்து நேற்றையதினம் வரை 36 கோவிட் பூதவுடல்கள் வெளி மாவட்டத்தில் மின் தகனம் செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ் போதனா வைத்தியசாலையில் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் பூதவுடல்கள் உரிய சுகாதார வழிகாட்டல்களுடன் வெளிமாவட்டங்களுக்கு மின் தகனத்திற்காக அனுப்பப்பட்டு வருகிறது.
இவ்வாறு அனுப்பப்படுகின்றன சில பூதவுடல்களுக்கு உறவினர்களால் மின் தகனம் செய்வதற்குரிய பணம் மற்றும் பூதவுடல்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்கான பெட்டிகளை வாங்க இயலாதவர்களுக்கு அவற்றைக் கொடையாளர்களிடம் பெற்று அனுப்புகிறோம்.
தகனம் செய்வதற்காக அனுப்பப்படும் பூதவுடல்களுடன் அவர்களின் உறவினர்கள் கூடவே செல்ல விரும்பினால் அவர்களில் சிலரை மட்டும் அழைத்துச் செல்கிறோம்.
உறவினர்கள் எல்லோரும் செல்ல முடியாத சூழ்நிலையில் இறந்த பூத உடல்களை அடக்கம் செய்வதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் யாழ் போதனா வைத்தியசாலையினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இறந்தவர்களின் உறவினர்கள் எல்லோரும் அதில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் அங்கு நடைபெறும் தருணத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டு அவர்களுக்குரிய அஞ்சலிகளைத் தத்தம் வீடுகளில் செலுத்த வேண்டும்.
போதனா வைத்தியசாலையில் கோவிட் தொற்றினால் இறந்த பூத உடல்கள் பிரேத அறையில் உரிய முறையில் அதற்கு உரிய மரியாதைகளுடன் பாதுகாக்கப்படுகிறது.
யாழ். போதனா வைத்தியசாலையின் நலன்புரி சங்கத்தினர் இறந்த பூத உடல்களை வெளி மாவட்டத்துக்குக் கொண்டு செல்வதற்கு மிகவும் அர்ப்பணிப்புடன் தமது சேவைகளை வழங்கி வருகிறார்கள்.
உயிரிழந்த பூத உடல்களை வெளி மாவட்டத்துக்கு அனுப்புவதற்கு ஏற்ற ஒழுங்குகளை கவனிப்பதற்காக வைத்தியர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு பூதவுடல்களும் உரிய முறையில் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறன.
ஆகவே கோவிட் தொற்றின் காரணமாக தமது உயிர்களை இழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காக உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி அவர்களுக்குரிய கடமைகளை நிறைவேற்றுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.