ராஜபக்சர்களின் ஆட்சியில் ஜனாதிபதி மாளிகைக்குள் நடந்தது என்ன...! அம்பலப்படுத்தும் பிரதமர்
ஜனாதிபதி மாளிகைகளை பராமரிப்பதற்காக கடந்த ஒன்பது வருட காலத்தில் சுமார் 35 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை, கண்டி, நுவரெலியா, கதிர்காமம், அனுராதபுரம், மஹியங்கனை மற்றும் பெந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் இந்த ஜனாதிபதி மாளிகைகள் அமைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகை பராமரிப்பு
ஜனாதிபதி மாளிகை பராமரிப்பு, பூங்காப் பராமரிப்பு, ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லப் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு உத்தியோகபூர்வ தங்குமிடக் கட்டடப் பராமரிப்பு என்பவற்றுக்காகவே இவ்வாறு பணம் செலவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மாளிகைகளை பராமரிப்பதற்காக 2018 ஆம் ஆண்டில் 15 மில்லியன் ரூபாவும், கட்டடத் திருத்தச் செலவுகளாக 110 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 2019 ஆம் ஆண்டில் கட்டடப் பராமரிப்புச் செலவாக 15 மில்லியன் ரூபாவும், திருத்தச் செலவாக 62 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டில் கட்டடப் பராமரிப்புச் செலவு 12 மில்லியன் ரூபாவாகவும், திருத்தச் செலவு 22.7 மில்லியன் ரூபாவாகவும் காணப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ இல்லங்கள்
கடந்த 2021 ஆம் ஆண்டில் கட்டடப் பராமரிப்புச் செலவு 10 மில்லியன் ரூபாவாகவும், திருத்தச் செலவு 18.8 மில்லியன் ரூபாவாகவும் காணப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் பராமரிப்புச் செலவாக 12 மில்லியன் ரூபாவும், திருத்தச் செலவாக 13 மில்லியன் ரூபாவும், செலவிடப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் பராமரிப்புச் செலவு 26.04 மில்லியன் ரூபாவாகவும், திருத்தச் செலவு 11 மில்லியன் ரூபாவாகவும் இருந்ததாக பிரதமர் கூறினார்.
கடந்த 2024 ஆம் ஆண்டில் பராமரிப்புச் செலவு 13.09 மில்லியன் ரூபாவாகவும், திருத்தச் செலவு 10.05 மில்லியன் ரூபாவாகவும், 2025 ஆம் ஆண்டில் பராமரிப்பு செலவு 7.05 மில்லியன் ரூபாவாகவும், திருத்தச் செலவு 3 மில்லியன் ரூபாவாகவும் பதிவாகியுள்ளன.
நடப்பாண்டில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை பராமரிப்புச் செலவாக 3 மில்லியன் ரூபாவம், திருத்தச் செலவாக 0.4 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை சமகால அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகிப்பவர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்கள் மக்களின் தேவைக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடதக்கது.