மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 324 ஆசிரியர்கள் மேலதிகமாகவுள்ளனர்! வலய கல்வி பணிப்பாளர்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மேற்கு, கல்குடா ஆகிய கல்வி வலயங்களில் 300இற்கும் மேற்பட்ட ஆசிரிய வெற்றிடங்கள் நிலவும் நிலையில் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 324 ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளதாக மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தின் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் சேவைக்குள் பட்டதாரிகளை உள்ளீர்க்கும் கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு கல்வி திணைக்களத்திற்குள் உள்ளீர்க்கப்பட்ட 70 ஆசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினை தீர்க்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் முயற்சியினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கல்வி திணைக்களத்திற்குள் உள்ளீர்க்கப்பட்ட 364 ஆசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தின் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான சு.சரணியா, சாமினி ரவிராஜா, உதவி கல்வி பணிப்பாளர் ஜோன் பிரபாகரன் உட்படப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டதுடன் அவர்கள் கடமையாற்றும் பாடசாலைகளின் விபரங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தின் பணிப்பாளர்,
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு 386 பட்டதாரிகளின் பெயர்ப்பட்டியல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு கல்வி வலயத்தினை பொறுத்தவரையில் இன்றைய நிலையில் ஏற்கனவே இங்கு சேவையில் இருக்கின்ற ஆசிரியர்களில் 324ஆசிரியர்கள் மேலதிகமாக இருக்கின்றார்கள்.
அதேசமயம் மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கின்ற கல்குடா மற்றும் மட்டக்களப்பு மேற்கு வலயங்களுக்கு 300இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தலா ஒவ்வொரு வலயங்களுக்கும் தேவையாக உள்ளனர். ஆனாலும் எமது பட்டதாரிகள் எல்லோருக்கும் விருப்பம் மட்டக்களப்பு வலயத்திலேயே தாங்கள் வேலை செய்ய வேண்டும் என்பதாகும்.
அதற்குப் பின்னால் பல அழுத்தங்களைப் பிரயோகித்திருக்கின்றீர்கள். இதுவே உண்மையாகும்.
பெரும்பாலானவர்கள் இந்த வலயத்திற்குள்ளேயே வேலை செய்ய வேண்டுமென்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.







