மட்டு-சத்துருக்கொண்டான் படுகொலையின் 31ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிப்பு
எந்த நீதியும் இல்லாத இனப்படுகொலை வரிசையில் மட்டு-சத்துருக்கொண்டான் படுகொலையின் 31ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் கருத்து தெரிவிக்கையில்,
1990ம் ஆண்டு ஆவணித்திங்கள் 9ம் நாளில் சத்துருக்கொண்டானில் 186 அப்பாவித் தமிழர்களின் அவலக்குரல் ஓங்கி ஓலித்து அடங்கிப்போனதை இன்றும் எமது மனங்கள் ஏற்க மறுக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் சத்துருக்கொண்டான், பனிச்சையடி, பிள்ளையாரடி, கொக்குவில் ஆகிய கிராமங்களில் வீடுகளில் தங்கியிருந்த பொதுமக்கள் கடந்த 1990 ஆம் ஆண்டு செப்டெம்பர் 9 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் சத்துருக்கொண்டான் இராணுவ முகாமுக்கு என அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
இவர்களில் 5 விசேட தேவையுள்ள பிள்ளைகள். மேலும் 42 பிள்ளைகள் 10 வயதிற்குட்பட்ட பிள்ளைகள். 85 பேர் பெண்கள், 28 பேர் முதியவர்கள் என பலதரப்பட்டவர்கள் ஈவிரக்கமின்றி கொலை செய்யப்பட்டனர்.
தமிழர்களாகிய நாம் எமக்கு ஏற்பட்ட இன்னல்கள், படுகொலைகள், அவலங்கள் இன அழிப்புகள் சம்பந்தமான நினைவுகள் , துரோகங்களினால் நாம் அடைந்த இழப்புகள் போன்றவற்றை அந்தந்த தினங்களில் எத்தனை வருடங்கள் கடந்தாலும் நினைவு கூரவேண்டியது எமது தார்மீக கடமையாகும்.
அவ்வாறு செய்வதன் ஊடாகவே எமது இளைய சந்ததியினர் , இளைஞர்கள், மாணவர்கள் எமது வரலாற்றை அறிய ஏதுவாக இருக்கும்.சோக வடுக்களைத் தாங்கிய இந்த நாளிலே படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்காக பிரார்த்திப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.