தங்கள் கடமையின் போது சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உயிர் தியாகம் செய்துள்ள 3137 பொலிஸ் உத்தியோகத்தர்கள்
1864ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையிலான காலப்பகுதியில் 3137 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளதுடன், 1610 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஊனமுற்றுள்ளதாக வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் லால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
வன்னி பிராந்திய பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்திலுள்ள உயிரிழந்த பொலிஸ் வீரர்களின் நினைவுத் தூபியில் 157ஆவது பொலிஸ் வீரர்கள் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 1864ஆம் ஆண்டு பங்குனி மாதம் 21ஆம் திகதி சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்காக செல்கையில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் சபான் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்ததுடன், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான உயிர் நீத்த முதலாவது சந்தர்ப்பமாக இது வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
அவர் இறந்த அத்தினம் பொலிஸ் வீரர்களின் நினைவு தினமாக நினைவு கூரப்படுவதுடன், நாம் 157ஆவது பொலிஸ் வீரர்கள் தினத்தினை இவ்வாறு இன்று கொண்டாடுகின்றோம்.
அன்றைய தினத்திலிருந்து இது வரையில் தங்கள் கடமையினை செய்யும் போது 3137 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிர்த் தியாகம் செய்ததுடன் 1610 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஊனமுற்றும் உள்ளனர்.
உயிர் தியாகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் ஊனமுற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய நலன்புரி வசதிகளை எவ்வித தடையுமின்றி வழங்குவதற்கு இலங்கை பொலிஸ்துறை நடவடிக்கை எடுப்பதுடன், தங்களின் பல்வேறு துன்ப சந்தர்ப்பங்களில் அவற்றைக் கேட்டு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள நாம் எப்போதும் செயற்படுவோம்.
அத்துடன் எமது தாய் நாட்டிற்காகக் கடமை செய்யும் சமயத்தில் ஊனமுற்றவர்கள் விரைவாகக் குணமடைய இறைவனை வேண்டிக்கொள்வதுடன் தாய் நாட்டிற்காக உயிர் நீத்த வீரர்களே மீண்டும் உங்களுக்கான இலங்கை பொலிஸ் கௌரவத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
