இரணைதீவு இறங்குதுறையை புனரமைப்பதற்கு சுமார் 300 மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி தேவை
கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைதீவு பகுதியில் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்ற இரணைதீவு இறங்குதுறை புனரமைப்பதற்கு சுமார் 300 மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிக கடல் வளம் கொண்ட பிரதேசமாகக் காணப்படுகின்ற இரணைதீவு பகுதியில் சுமார் இருபது வருடங்களுக்குப் பின்னர் மக்கள் மீள் குடியேறி தற்போது வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறு மீள் குடியேறிய கடற்றொழிலாளர்கள் பெருமளவு முதலீடுகளைச் செய்து கடல் அட்டை வளர்ப்பு மீன்பிடி என பல்வேறுபட்ட தொழில் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த ஆண்டில் புனரமைக்கப்பட்ட இறங்கு துறையானது அண்மையில் ஏற்பட்ட புரவி புயல் காரணமாகச் சேதமடைந்து காணப்படுகின்றது.
எனவே இதனைப் புனரமைத்து தருமாறு கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இதனைப் புனரமைப்பதற்கு சுமார் 300 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட நிதி தேவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இரணை தீவுப்பகுதியில் மீள்குடியேறிய மக்கள் மீள் குடியேறியுள்ள
நிலையில் அந்த பிரதேசங்களிலேயே மேற்கொள்ளப்பட வேண்டிய உட்கட்டுமான வேலைகள் வீதி
புனரமைப்பு மற்றும் குடிநீர் வசதியை ஏற்படுத்துதல், போக்குவரத்து வசதியை
ஏற்படுத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கடந்த 31ஆம் திகதி பிரதேச
செயலாளர் மற்றும் வட மாகாண திணைக்களத்தின் துறைசார் அதிகாரிகள்
மதிப்பீடுகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.