நுவரெலியாவில் முகப்புத்தக களியாட்டம்: 30 பேர் கைது
நுவரெலியா- கிரகறி வாவி கரையோரத்தில் நான்காவது வாகனத் தரிப்பிரத்தில் இடம்பெற்ற முகப்புத்தக களியாட்ட நிகழ்வொன்றை சுற்றிவளைத்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்று முன்தினம் (18) சனிக்கிழமை காலை ஆரம்பிக்கப்பட்டு (19) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருட்களுடன் முகப்புத்தக (பேஸ்புக்) களியாட்ட நிகழ்வொன்று இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதன்போது சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட குஷ் போதை பொருள் , கஞ்சா, ஐஸ், தீர்வை செலுத்தபடாமல் சட்டவிரோதமாக வெளிநாட்டில் இருந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகள், போதைப்பொருள் மாத்திரைகள் மற்றும் மாவா உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்களைக் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 35 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் கம்பஹா, மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டிய, மரதானை, கிராண்ட்பாஸ், பெலியகொட மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டடு மேலதிக விசாரணையின் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.











