பொலிஸாருடன் தகராறு செய்து அதனை காணொளி எடுத்து முகநூலில் பதிவேற்றம் செய்த மூவர் கைது
மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் இரு குடும்பங்களுக்கு இடையே இடம்பெற்ற குடும்ப தகராறு காரணமாகச் செய்யப்பட்ட முறைப்பாட்டின் எதிராளிகளை அழைத்தும் பொலிஸ் நிலையத்திற்கு ஆஜராகாத நிலையில் அவர்களை தேடி வீட்டுக்குச் சென்ற பொலிஸாருடன் தகராற்றில் ஈடுபட்டு அதனைக் காணொளி எடுத்து முகநூலில் பதிவு செய்த 3 பேரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (6) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஐயங்கேணி றியாஸ் பேக்கரி வீதியைச் சேர்ந்த இரு குடும்பங்களுக்கிடையே தகராறு இடம்பெற்ற நிலையில், கடந்த முதலாம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் முறைப்பாடு செய்தவர்களுக்கு எதிரானவர்களை பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அறிவுறுத்தல் விடுத்திருந்தனர்.
இதன் பின்னர் குறித்த நபர்கள் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகாத நிலையில், அவர்கள் வீட்டில் இருப்பதாக பொலிஸாருக்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததையடுத்து பொலிஸார் குறித்த வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இதன்போது 5 பேர் கொண்ட குழுவினர் பொலிஸாருடன் தகராற்றில் ஈடுபட்டதுடன், அவர்கள் கடமையைச் செய்ய விடாது செயற்பட்டுள்ளனர்.
அத்துடன் கையடக்க தொலைபேசி ஊடாக பொலிஸாருடன் முரண்பட்ட சம்பவத்தைக் காணொளி எடுத்து அதனை முகநூலில் பதிவு செய்து பொலிஸாரை ஒரு பிழையானவர்களாகச் சித்தரித்துள்ளதுடன், தகவல் வழங்கியவருக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக 3 பேரை இன்று கைது செய்துள்ளதுடன், தலைமறைவாகியுள்ள இருவரைத் தேடி வருவதாகவும், இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.