மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் வாரம் முதல் 2ஆவது தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுப்பு
மன்னார் மாவட்டத்தில் கடந்த ஜுலை மாதம் சினோபாம் முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இரண்டாவது தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 5ஆம், 6ஆம், 7ஆம் திகதிகளில் சினோபாம் முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கான 2ஆவது தடுப்பூசி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை மற்றும் பேசாலை சென் மேரிஸ் கல்லூரி ஆகியவற்றிலும், அன்றைய தினம் மாலை 2 மணி முதல் 4.30 மணி வரை எருக்கலம்பிட்டி பிரதேச வைத்தியசாலை மற்றும் தலைமன்னார் றோமன் கத்தோலிக்க பாடசாலை ஆகியவற்றில் சினோபாம் கோவிட் தடுப்பூசியின் 2ஆவது தடுப்பூசி வழங்கப்படும்.
மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் திங்கட்கிழமை காலை 8 மணி முதல் சினோபாம் கோவிட் தடுப்பூசியின் 2ஆவது தடுப்பூசி வழங்கப்படும்.
அன்றைய தினம் முசலி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் காலை 8 மணி முதல் சினோபாம் கோவிட் தடுப்பூசியின் 2ஆவது தடுப்பூசி வழங்கப்படும்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மடு ஆலயத்திற்கு அருகில் உள்ள வைத்தியசாலையில் காலை 8 மணி முதல் சினோபாம் கோவிட் தடுப்பூசியின் 2 ஆவது தடுப்பூசி வழங்கப்படும்.
மேலும் இரணையிலுப்பைக்குளம் ஆரம்பச் சுகாதார வைத்தியசாலையிலும் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் சினோபாம் கோவிட் தடுப்பூசியின் 2 ஆவது தடுப்பூசி வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.