இனத்திற்காக தங்களை அர்ப்பணித்தவர்களை பராமரிக்க வேண்டியது காலத்தின் கடமை: தமிழ் தொழிலதிபர் (Photos)
ஒரு காலத்தில் இனத்திற்காக தங்களை அர்ப்பணித்தவர்கள் இன்று தங்களின் அவயங்களை இழந்து எங்கள் முன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள், அவர்களை பராமரிக்க வேண்டியது எங்களின் கடமை என புலம்பெயர் தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
நினைவேந்தல் நிகழ்வு
சிரேஷ்ட சட்டத்தரணி அமரர் கௌரி சங்கரி தவராசாவின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
கௌரி சங்கரி தவராசா ஞாபகார்த்த அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இன்று (26.08.2023) பிற்பகல் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வு கிளிநொச்சி விவேகானந்த நகரில் அமைந்துள்ள வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தில் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் பிரபல புலம்பெயர் தமிழ் தொழிலதிபரும், ஐபிசி குழுமத்தின் தலைவருமான கந்தையா பாஸ்கரன் கலந்து கொண்டு உரையாற்றும் போதே குறித்த விடயத்தை கூறியிருந்தார்.
எமக்குள்ள பொறுப்பு
மேலும் தெரிவிக்கையில், இங்கு எங்கள் முன் உள்ளவர்கள் காலத்தின் தேவை கருதி எங்களுக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள். எங்களுக்காக தங்களின் கண், கை, கால்களை இழந்தவர்கள்.
எனவே இவர்களை பராமரிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் எங்களுக்குண்டு. அதன் காரணமாகதான் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தனது துணைவியாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வை முன்னிட்டு என்ன நிகழ்வை ஏற்பாடு செய்யலாம் என வினவிய போது நான் அவரை இந்த இடத்திற்கு அழைத்து வந்தேன்.
இங்கே இப்படியொரு சமூகம் இருப்பது பலருக்கு தெரியாது. இது மிகவும் கவலைக்குரியது. எனவே இங்கு வருகை தந்துள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள், இவர்கள் தொடர்பில் கரிசனைகொள்ள வேண்டும்.
இவர்கள் பராமரிக்கப்பட வேண்டும். உலகையே அச்சுறுத்திய கொடிய கோவிட் தொற்றால் உயிரிழந்த சட்டத்தரணி கௌரி தவராசாவை மக்கள் அதிகம் நேசிக்கின்றமைக்கு காரணம் அவர் இவ்வாறானவர்களை அதிகம் நேசித்தவர். தனது தொழில் வல்லமையை இனத்திற்காக பயன்படுத்தியவர் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் சரவணபவன் உள்ளிட்ட
ஏராளமானவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.