எல்லைக் கிராமத்தில் 28 உயிர்க் கொலைகள்: திட்டமிட்டு அமைக்கப்பட்ட திறந்தவெளி சிறைச்சாலை!!

srilanka killed mullaitivu tamil peoples article
By Jera Nov 09, 2021 04:17 AM GMT
Report
Courtesy: - ஜெரா -

கடந்த வாரம் வவுனியா நகரில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டிருந்தது. அதாவது மதவாச்சியில் குடியிருக்கும் சிங்கள குடும்பங்களில் 1330 பேரை வவுனியா வடக்கு பகுதியோடு இணைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.

வவுனியா வடக்கு எல்லைக் கிராமங்களில் இவ்விதம் நடக்கும் குடியேற்றங்கள் புதிதுபோன்றதொரு ஊடக வெளிச்சம் அவ்வப்போது கிடைப்பதுண்டு. ஆனால் உண்மை அதுவல்ல. வவுனியா வடக்கின் எல்லையை அழிப்பதற்கான திட்டமிட்ட செயற்பாடுகளுக்கு வயது 40 வருடங்களைக் கடந்துவிட்டது. அதற்கும் நீண்டதொரு வரலாற்றுப் பாரம்பரியம் உண்டு.

காடுகளால் மூடப்பட்ட கிராமங்கள்

வவுனியா வடக்கின் ஒரு மூலை, காடுகளால் மூடப்பட்ட கிராமங்களைக் கொண்ட பகுதி;. ஒலுமடு, பாலைமோட்டை, பட்டிக்குடியிருப்பு, கற்குளம், கீரிசுட்டான், ஒதியமலை, துவரங்குளம், வயல்குடியிருப்பு, பாவற்காய்குளம், விண்ணாங்கம்பிட்டி, அரியகுண்டான், அக்கானிசன்குளம், தனிக்கல்லு, மெனிக்பாம், ஹென்பாம், டொலர்பாம், சிலோன் தியேட்டர் போன்றன அவற்றுள் இப்போது அடையாம் தெரியும் கிராமங்கள்.

அந்தக் கிராமங்களின் காட்டுத் தெருக்களில் எப்போதாவது தென்படும் மனிதத் தலைகளைக் கொண்டுதான் அங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கின்றனர் என்பதைப் புதிதாக நுழைகின்றவர்கள் கண்டுகொள்கின்றனர். அடர் காடுகளுக்குள் அமைந்து விட்ட முதுமையான விவசாயக் கிராமங்கள் பல இப்போது காடுகளினால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. இன்னும் பலவோ காணமலே போய்விட்டன. எப்போதாவது வரும் செய்திகளைத் தவிர, அங்கு என்ன நடக்கின்றது என்பது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

இன்னமும் மிச்சமிருக்கும் வரலாற்றுப் புலம்

இந்தப் பகுதிக்குள் அடக்கப்பட்டிருக்கும் கிராமங்கள், வன்னியின் தொன்மையான வரலாற்றுப் புலங்களை இன்னமும் தன்னுள் மறைத்து வைத்திருக்கின்றன. தெற்கே பதவியா தொட்டு வடக்கே வெடுக்குநாறி மலை வரையான அடர்காட்டுக்குள்ளளும், இடையே ஒதியமலை, கோடலிக்கல்லு, பண்டாரிக்குளம் போன்ற பகுதிக்குள்ளும் இந்த வரலாற்று எச்சங்கள் இருக்கின்றன. அவை தமிழர்களின் பூர்வீக வாழ்வை உறுதிப்படுத்தக் கூடியனவாக இருக்கின்றன.

தொன்மையான இந்து தெய்வச் சிலைகள், கல்வெட்டுக்கள், கட்டட இடிபாடுகள் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றன. 1896 ஆம் ஆண்டுகளில் வன்னியின் வரலாற்றை ஓரளவுக்குத் தொல்லியல் ஆதாரங்களை வைத்து எழுதிய பிரித்தானிய ஆளுநரான ஜே.பி.லூயிஸ் தனது Manual of the Vanni Districts என்ற தனது நூலில் பதிவுசெய்திருக்கின்றார்.

பொலநறுவையை தமிழ் மயப்படுத்தி ஆட்சிபுரிந்த சோழர்கள் இந்தக் கிராமங்களில் ஆதிக்கம் செலுத்தியமைகான சான்றுகள் உண்டு. இன்றும் சோழர்களால் அமைக்கப்பட்ட பார்வதியம்மன் கோயில் பதவியாவில் இருக்கின்றது.

தனித்தமிழ் கிராமங்களும், தனியார் கிராமங்களும்

இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து, 1970 ஆம் ஆண்டுவரை இந்தக் கிராமத்தில் வாழ்ந்தவர்கள் கணக்கிலெடுக்கப்படவில்லை. அந்த ஆண்டைத் தொடர்ந்து இலங்கையில் வாழ்ந்த இனங்களிடையே கூர்மைபெற்ற தேசிய எண்ண உருவாக்கம் நிலப்பறிப்புகளை ஏற்படுத்தியது.

பெரும்பான்மை இனத்தவர்கள் இந்த எண்ண அலையில் அதிகம் அள்ளுண்டார்கள். தமிழ் பிராந்தியத்தின் அப்போதைய எல்லையாக இருந்த இந்தக் கிராமங்கள் அவர்கள் கரையொதுங்குவதற்கான கரைகளாயிருந்தன. பின்னாளில்- தற்போதும் திருட்டுக் குடியேற்றங்களுக்கான தொடக்க வாயிலாகப் பயன்படுத்திக்கொண்டனர்.

மணலாற்றின் முக்கியத்துவத்தைப் பிரதிபலித்த அந்த விவசாயக் கிராமங்களும் பண்ணைகளும் முதல் கட்ட மண்பறிப்பு அபாயத்தை எதிர்கொண்டன. கொழும்பு தமிழ் முதலாளிக்கு சொந்தமான 500 ஏக்கர் ஹென்பாம், மாவிட்டபுரம் தமிழ் முதலாளியின் 500 ஏக்கர் டொலர்பாம், தம்பு றொபினுடைய 1000 ஏக்கர் சிலோன் தியேட்டர், அல்வாய் தமிழ் முதலாளியின் 1000 ஏக்கர் சரஸ்வதி பாம், நீதி ராஜாவின் யானை பீடி கொம்பனி பாம், தனித் தமிழ் உரிமையாளர்களுக்குரிய தனிக்கல்லு, மற்றும் அரியகுண்டான், பட்டிக்குடியிருப்பு, ஒதியமலை போன்றன 1980 ஆம் ஆண்டுகளில் மிகத் தீவிரமான சிங்கள மயமாக்கலை எதிர்கொண்டன.

துரத்துவதற்கான செயற்றிட்டம்

இப்படித்தான் இவை அனைத்தும் தமிழ் கிராமங்களாக இருந்த போதிலும் சிங்களவர்களுக்குத் தேவையாகவிருந்தன. 1984 ஆம் ஆண்டில் இலங்கை அரசால் கொண்டுவரப்பட்ட வெலியோயா, மகாவலி அபிவிருத்தி, குடியயேற்றத் திட்டங்கள் திட்டமிட்ட வகையில் அரங்கிற்குள் பிரவேசித்தன. இந்தக் கிராமத்துக்குடிகள் உறக்கத்திலிருக்கும் சந்தர்ப்பங்களில் சிங்களர் திருட்டுக் குடியேற்றங்களை விரைவுபடுத்தினர்.

தொன்மைக்குடியில் வந்த குணம் அடிபணிதலுக்கோ, அடங்கிப் போதலுக்கோ இடம் கொடுக்கவி;ல்லை. திருட்டுக் குடியேறிகளுக்கு எதிராக மல்லுக்கு நின்றது. இடியன்களும், சொட்கன்களும் எப்போதும் தயாராகவே இருந்தன. சிங்களவர்களும் விடுவதாக இல்லை.

தமிழர்களைத் துரத்த வேண்டும் என்பதில் வெறியோடு காடுகளுக்குள் அலைந்தனர். தொழிலில் கைவைத்தனர். இரவோடிரவாக தமிழர்கள் வளர்ந்த மந்தைகளைப் பட்டியோடு சாய்த்துப் போயினர். மறுநாள் இரவு சிங்களவர்களின் எருமை மாடுகள் ஒதியமலைக்கோ, பட்டிக்குடியிருப்புக்கோ சாய்த்துவரப்படும் நிலை பலகாலம் தொடர்ந்தது. அதுவும் கைகூடாது போகவே கொலை வழியைத் தெரிவு செய்தனர். இரவிரவாக வந்து ஆண்களைப் பிடித்துச் சென்றனர். வீட்டோடு சேர்த்துக் கொழுத்தினர். கடைகள், வீடுகள், வயல்கள், மந்தைகள் என அனைத்துப் பொருளாதார ஈட்டங்களையும் சூறையாடியனர்.

திடீர் திடீர் என காட்டுக்குள் இருந்து வரும் பச்சை உடையணிந்த மனிதர்கள் அந்தக் கிராமங்கிளில் அகப்பட்டவர்களை வெட்டிச் சாய்த்தனர். ஒரே வீட்டில் சாவுக்கு மேல் சாவு விழுந்து நொருங்கிய போதிலும் அந்தக் கிராமத்தவர்கள் நிலம் பெயர மறுத்தனர். அவர்களுக்கு வயல்களையும், காடுகளையும், மாடுகளையும் தவிர வேறு என்ன தெரியும்? வாழ்வோ சாவோ இந்த மண்ணோடுதான் என்று இருந்துவிட்டனர்.

ஒரு படுகொலையோடு நிலம் பெயர்த்தல்

1980ஆம் ஆண்டுகள், தமிழ் இரத்தத்தால் கைகழுவிய பொழுதுகளை அதிகமாகக் கொண்டிருந்தது. 1983 படுகொலையாளிகள் கண்ணாமூச்சிக்காக கைது செய்யப்பட்டனர். திட்டமிடப்பட்ட வகையில் அவர்களுக்கான திறந்த வெளிச்சிறைச்சாலைகள் இந்த எல்லைக் கிராமங்களின் அருகில் அமைக்கப்பட்டன.

இடையில் ஒரு காடு. அந்தக் காடுதான் சிறையின் ஒரு பக்கப் பாதுகாப்புச் சுவர். அதைக் கடந்தால் ஏற்கனவே துரத்தப்படக் காத்திருக்கும் கிராமங்களுக்குள் நுழையலாம். புனர்வாழ்வுக்காக அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தக் குழுவினர் சதா காலமும் மூடிய காடுகளுக்குள் கொலைகளுக்காக அலைந்தனர்.

மாடு சாய்க்கவும், வேட்டைக்காகவும் காடுகளுக்குள் செல்லும் இந்த எல்லைக் கிராமத்து ஆண் மகன்களின் தலைகள் கொலைக்காகப் பயன்படுத்தப்பட்டன. மரங்களில் ஏறி மறைந்திருக்கும் சிறைவாசிகள் தமிழ்த் தலைகளைக் கண்டதும் லாவகமாகப் பாய்ந்து அவர்களின் தலைகளை அறுத்தெடுத்து முண்டமாக்கி விடுவர். உடனே தமிழ் முண்டத்தின் ஆடைகளைக் களைந்து தாம் அணிந்து கொண்டு, தமது சிறையாடைகளை முண்டங்களுக்கு அணிவித்து விட்டு தப்பிச்சென்றுவிடுவர்.

இந்தக் கொலைமுறை திறந்த வெளிச்சிறைச்சாலைகள் எல்லைக் கிராமங்களில் அமைக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்தது. சாவுகளின் எல்லை மீறலைக் கண்டு கொதிப்படைந்த தமிழ்சனங்கள் தமது மரபு வழிவந்த ஆயுதங்களோடு காடுகளுக்குள் இறங்கினர். பலியெடுத்தவர்களைப் பழியெடுத்துவிட்டு மறு நாள்காலையே ஊர் திரும்பினர். இதற்குப் பதிலடி கொடுக்க சிறைக்குழு தயாரானது.

எல்லைக் கிராமத்தில் 28 உயிர்க் கொலைகள்

02.12.1984. ஓதியமலைக் கிராமம் சாதாரணமாக விடிந்தது. இரண்டு நாட்களுக்கு முன் அங்கு நடந்த திருமண நிகழ்வின் வாசனை அந்தக் காலையிலும் வீசிக்கொண்டிருந்தது. அவ்வேளையில்   கிராமத்துக் காடுகளுக்குள் இருந்து 'இயக்கப் பெடியன்களின்' சாயலில் வெளிப்பட்ட மனிதர்கள்,' பெடியன்களைப்' போலவே ஆண்கள் அனைவரையும் பொது நோக்கு மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.

புதுமாப்பிள்ளையும் போனான். மண்டபத்துக்குள் நுழைந்ததும் அவர்களின் கைகளும், கண்களும் கட்டப்பட்டன. வரிசையாக நிறுத்தி வைத்து அவர்களின் உறுப்புகளைக் கடித்துக் குதறினர். 28 பேரை அவ்விடத்திலேயே நெற்றியில் சுட்டுக் கொன்றனர். மிகுதி 4 பேரை ட்ராக்டரில் ஏற்றிக் காட்டுக்குள் கொண்டு சென்று ரயர் போட்டுக் கொழுத்தினர்.

கைவிடப்பட்டன கிராமங்கள்

இந்தக் கொலை வெறியாட்டத்தோடு அந்த எல்லைக் கிராமங்களின் பூர்வ குடிகளால் அங்கு வாழ முடியாமல் போனது. இயக்கத்தாலும் அங்கு சனங்கள் வாழ முடியும் என்ற உத்தரவாதத்தை வழங்க முடியவில்லை. மேற்குறித்த அனைத்துக் கிராமங்களின் மக்களும் 1984 ஆம் ஆண்டில் அகதிகளாயினர். போர் சூனியப் பிரதேசங்களாக மாறின. அதில் போர் நடவடிக்கைகளின் போது ராணுவத்தினரிடம் சிக்கிய சிலோன் தியேட்டர், ஹென்பாம், டொலர்பாம் போன்றன விரைவான சிங்கள குடியேற்றங்களையும், சிங்களப் பெயர் மாற்றங்களையும் சந்தித்தன.

புலிகளின் கட்டுப்பாட்டில் போர் சூனியப் பகுதிகளாக இருந்த கிராமங்கள் மக்களற்று காடுமண்டின. 2002க்குப் பின்னர் உருவாக சமாதானக் காலப்பபகுதியில் இருபது வருடங்கள் கழித்து மீளவும் மக்கள் ஊர்திரும்பினர். பட்டிக்குடியிருப்பைக் கடந்து அவர்களால் செல்ல முடியவில்லை. முந்தைய எல்லைக் கிராமங்களைச் சேர்ந்த அனைத்து மக்களும் பட்டிக்குடியிருப்பை அண்டிய பகுதிகளில் தற்காலிக வீடுகளை அமைத்து வாழத் தொடங்கினர். மீண்டும் அடித்த போர் துரத்தியது. இதனால் தான் வன்னியில் ஏற்பட்ட இடப்பெயர்வுகளில் அதிகம் இடம்பெயர்ந்தவர்கள் இந்த எல்லைக் கிராமங்களின் மக்கள் என பதிவுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

அரியகுண்டான் வரை அவர்கள்

போர் ஓய்வுக்குப் பின்னர் ஊர் திரும்பினால், அவர்களிடம் ஊர் இல்லை. பட்டிக்குடியிருப்பு வரையில் சிங்களவர்களின் குடியேற்றங்கள் வந்திருக்கின்றன. பட்டிக்குடியிருப்பும் அதனை அண்மித்த சில கிராமங்கள் மட்டுமே இப்போது அந்தப் பூர்வீகத் தமிழர்களிடம் இருக்கின்றது.

தனிக்கல்லின் அரைவாசிப் பகுதி விழுங்கப்பட்டாயிற்று. அதற்கு அருகில் இருக்கின்ற அரியகுண்டான் கிராமம் கடைசியாக அபகரிக்கப்பட்டிருக்கின்றது. வவுனியா வடக்குப் பிரதேச செயலகத்தின், பட்டிக்குடியிருப்பு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட இந்தக் கிராமம் இப்போது சிங்களவர் வசமாக்கப்பட்டுள்ளது.

தியாகராஜா என்ற தனிநபருக்கு சொந்தமாக இருந்திருக்கின்ற இந்தக் கிராமம் கிட்டத்தட்ட 500 ஏக்கர் பரப்புக் கொண்டது. முற்றுமுழுதான வயல் நிலத்தையே கொண்டுள்ளதால் பிற கிராமத்தவரும் 1980 வரை இங்கு வேளாண்மை செய்து வந்திருக்கின்றனர். 1984ஆம் ஆண்டு இங்கிருந்து இடம்பெயர்ந்த தமிழர்கள் 2010 ஆம் ஆண்டு வரை அங்கு செல்லவில்லை.

பழையபடி இந்தப் பகுதி மக்கள் மீளக்குடியேறிய பின்னர் அங்கிருந்த பல கிராமங்கள் சிங்கள மக்களின் குடியேற்ற நிலங்களாக மாறியிருக்கின்றன. ஆறு மாதத்திற்கு முதல் அரியகுண்டானில் கிட்டத்தட்ட 65 வரையிலான சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். அத்தோடு அந்தக் கிராமத்தின் பெயரும் அதாவெட்டுவெள என சிங்கள மொழிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இது போலவே கொக்கைச்சாண்குளம் எனப்படும் பகுதியும் சிங்களமயமாக்களுக்குட்பட்டுள்ளது. அங்கு 2010 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 165 சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளதுடன், அதற்கு கலாபோகஸ்வெள எனப் பெயர் மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. அங்கு புதிதாகக் குடியேற்றப்பட்டிருக்கும் சிங்கள மக்களுக்கு சகல குடியேற்ற வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. இப்போது இதற்கு அயலில் இருக்கின்ற தனிக்கல்லுக் கிராமத்தின் ஒரு பகுதி குடியேற்றமயமாகி விட்டதாக அங்கிருப்பவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

பரவலடையும் பௌத்த விகாரைகள் வவுனியா வடக்குப் பகுதியில் இராணுவம், பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினர் இணைந்தே தொல்லியல் மையங்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

வவுனியா மாவட்டத்தின் பிரதான புவியியல் அம்சமான மலைகள், குன்றுகள், பாறைத் தொடர்கள் பண்டைய மக்கள் வாழ்வதற்கும், தம் வரலாற்று எச்சங்களை விட்டுச்செல்வதற்கும் வழியேற்படுத்திக்கொடுத்துள்ளது.

தற்போது அவ்வாறான பகுதிகளுக்கு செல்லும் மேற்குறித்த தரப்பினர் அவையனைத்தும் புத்த பகவானின் எச்சங்கள் என்ற முடிவை விரைவாக அறிவித்துவிடுகின்றனர். எனவே சாளம்பன்குளம், மருதோடை, வெடுக்குநாறி, நெடுங்கேணி ஐயானார் கோயில், நயினாமடு என பௌத்த எச்சங்கள் காணப்படும் இடங்கள் நாளாந்தம் அதிகரித்தே செல்கின்றன.

இதற்காக என்ன செய்வோம் இவ்வாறு,

தமிழர் பிராந்தியத்தின் எல்லைப்பகுதிகளில் விரைவுபடுத்தப்படும்திருட்டுக்குடியேற்றங்கள், அடுத்தகட்டம் நோக்கிய பாய்ச்சலுக்கும் தயாராகி வருகின்றது. இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதோடு நின்றுவிடாது, தமது அரசியல் பலத்தையும் இந்தப் பிராந்தியத்தில் நிலைநிறுத்திக் கொள்வதற்கான பணிகளில் இறங்கியிருக்கின்றனர்.

போர் முடிவுக்கு வந்தகையோடு முல்லைத்தீவு மாவட்டத்தோடு வெலியோயா என்ற புதியதொரு பிரதேச செயலகம் இணைக்கப்பட்டது. இதற்குள் வவுனியா தெற்கு வலயத்தில் வருகின்ற சில சிங்கள கிராமங்கள் சில உள்வாங்கப்பட்டன. இது வரை காலமும் தமிழரின் கிராமங்களாக வவுனியா வடக்குப் பிரதேச செயலகத்துக்குட்பட்டிருந்த அரியகுண்டான், கொக்கைச்சாண்வயல் போன்றன சிங்களவர்களின் குடியேற்றத்தோடு புதிய பிரதேச செயலகத்துக்குள் இணைக்கபடவுள்ளதாகவும் தெரியவருகின்றது. அவ்வாற இணைத்தால் தனி தமிழ்த் தேர்தல் மாவட்டமாக இருந்த முல்லைத்தீவு அடுத்து வரும் காலங்களில் சிங்களவர்களுக்கும் பங்கீடு வழங்கக் கூடிய ஒரு தேர்தல் மாவட்டமாக மாறும் நிலை உருவாகும்.

ஆகவே தமிழர்களின் தேர்தல் அரசியலுக்கும் வேட்டு வைக்கும் நடவடிக்கை இந்தக் குடியேற்றங்களின் பின்னால் இருந்து மேற்கொள்ளப்படுகின்றது. ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரம் சிங்களவர்களால் அரிக்கப்பட்டுவருகின்றது.

கொக்கிளாயிலிருந்து நாயாறு கடந்து செம்மலை வரைக்கும் அவர்களின் குடியேற்றம் நகர்ந்து விட்டது. இப்போது மறுபக்கமாக வவுனியா மாவட்டத்தின் எல்லையிலிருந்து நகரத் தொடங்கியிருக்கின்றனர். கிழக்கில் எவ்வாறு தமிழர்களின் பூர்வீக மாவட்டமான அம்பாறை கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கப்பட்டு விழுங்கப்பட்டதோ அதே போன்றதொரு நிலையே வடக்கிலும் உருவாக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலைமைகள் எதிர்காலத்தில் வடக்கிலும் தமிழரின் இருப்பை கேள்விக்குள்ளாக்கப் போகின்றது. இதற்காக நம்மால் என்ன செய்யமுடியும்? இந்தக் கேள்விக்கு ஒரேயொரு பதில் உண்டு. இதுபோன்ற எந்தவொரு அபரிகரிப்புக்கும் தீர்வினைச் சொல்லாத 13 ஆம் சீர்திருத்த சட்டத்தை வைத்து தீர்வினைப் பெற முயற்சிக்க மட்டுமே முடியும்.

 - ஜெரா -    

மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Montreal, Canada

13 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்

கண்டி, London, United Kingdom

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொழும்புத்துறை, கொழும்பு

12 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொள்ளுப்பிட்டி

15 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Kempen, Germany, London, United Kingdom

03 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US