சிம்பாப்வேயில் ஏற்பட்ட வீதி விபத்தில் 27 பேர் பலி
சிம்பாப்வேயின் மத்திய பகுதியில் சிறிய ரக பேருந்து ஒன்றும் கனரக லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தபட்சம் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் ஹராரேக்கு தெற்கே அமைந்துள்ள சீவு பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காகப் பயணித்தவர்கள் பயணித்த பேருந்தை, முந்திச் செல்ல முயன்ற கனரக லொறி மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
விபத்து இடம்பெற்ற இடத்திலேயே 23 பேர் உயிரிழந்ததுடன், ஏனையோர் உள்ளூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்குள்ளான பேருந்து முற்றிலும் தீப்பற்றி எரிந்துள்ளதை சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள காணொளிகள் காட்டுகின்றன.
முறையான பராமரிப்பின்மை, வீதிகளில் காணப்படும் குழிகள் மற்றும் அதிகளவு பயணிகளை ஏற்றிச் செல்லுதல் போன்ற காரணங்களால் சிம்பாப்வே வீதிகளில் தொடர்ச்சியாகப் பாரிய விபத்துகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.