மடு தேவாலயத்திற்கான காணியில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள விவசாயிகள்
மடு-கோயில் மோட்டை பகுதியில் உள்ள மடு தேவாலயத்திற்கான 50 ஏக்கர் விவசாய காணியில் 5 ஏக்கர் காணியில் மடு தேவாலயம் சார்பாக விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, ஏனைய காணியில் 27 விவசாயிகள் குத்தகை அடிப்படையில் இவ்வளவு காலமும் மடு தேவாலயத்திற்குக் குத்தகையைச் செலுத்தியே விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளதாக மன்னார் மறைமாவட்ட காணி பொறுப்பாளர் அருட்பணி இ. அன்ரனி சோசை அடிகளார் தெரிவித்துள்ளார்.
மடு-கோயில் மோட்டை பகுதியில் உள்ள விவசாய காணி தொடர்பாக நீண்ட காலம் இடம் பெற்ற கருத்து முரண்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று(28) மதியம் 12 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இடம்பெற்ற குறித்த ஊடக சந்திப்பில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி பி.கிறிஸ்து நாயகம் அடிகளார் , மடுத்திருத்தல பரிபாலகர் அருட்பணி பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட காணி பொறுப்பாளர் அருட்பணி இ. அன்ரனி சோசை அடிகளார் மடுத்திருத்தல முன்னைநாள் பரிபாலகர் பி.எமிலியானுஸ்பிள்ளை அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மறைமாவட்ட காணி பொறுப்பாளர் அருட்பணி இ. அன்ரனி சோசை அடிகளார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மடு-கோயில் மோட்டை விவசாயக் காணி தொடர்பாக அண்மையில் காணி ஆணையாளர் தலைமையில் மடு பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் இடம் பெற்றது. குறித்த கலந்துரையாடலின் அடிப்படையில் காணி ஆணையாளர் நாயகம் அனைவரிடமும் விசாரணைகளை மேற்கொண்டதன் பிற்பாடு அவர் வழங்கிய தீர்மானத்தின் படி இவ்வருடம் கடந்த வருடத்தைப் போன்று மடு பரிபாலகரினால் அவ்விடத்தில் 5 ஏக்கர் காணியில் விவசாயம் செய்யப்படவும், ஏனைய காணிகளில் ஏனைய விவசாயிகள் மேற்கொண்டு வந்தது போன்று 2 ஏக்கர் வீதம் விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுக்க அதிகாரிகளுக்குப் பணித்தார்.
இந்த நிலையில் மடு பரிபாலகர் விவசாய உத்தியோகத்தரினாலேயே மடு தேவாலயத்திற்கு இந்த கால போகத்திற்குரிய மேற்கொள்ள வேண்டிய விவசாய காணியைக் காட்டியதன் பிற்பாடு மடு பரிபாலகர் தனது வேலையாட்களை அனுப்பிக் குறித்த விவசாய காணியில் 2 தடவைகள் உழுதுள்ளார்.
பின்னர் கடந்த ஒரு வாரத்தில் நாங்கள் குறித்த காணிக்குச் சென்று உழுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போது ஏனைய விவசாயிகள் குறித்த காணிக்குள் செல்லக்கூடாது.
அது உங்கள் காணி இல்லை என அவர்கள் தற்போது கூறி வருகின்றனர். ஆனால் காணி ஆணையாளர் நாயகம் அவர்களினாலேயே வழங்கப்பட்ட கட்டளைக்கு அமைவாக நாங்கள் குறித்த காணியில் இந்த கால போகத்திலே விவசாயம் செய்ய வேண்டும்.
நாங்கள் 5 ஏக்கர் காணியில் மேற்கொண்டு வரும் விவசாயத்தில் கிடைக்கும் பணத்தில் மடு தேவாலயத்தின் அபிவிருத்தி பணிக்காகவும், பிறர் நலச் சேவைக்காகவும் சிறுவர் காப்பகங்களில் உள்ள தேவைகளை நிவர்த்தி செய்வதற்காகவும் கால காலமாக நிதியைப் பயன்படுத்தி வருகிறோம்.
ஏற்கனவே காணி ஆணையாளர் நாயகம் அவர்களால் வழங்கப்பட்ட கட்டளைக்கு அமைவாக தற்போது குறித்த விவசாய காணியில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் 27 பேரும் தங்களது கால போகப் பயிர்ச் செய்கையின் பிற்பாடு,அவர்கள் குத்தகையாக மடு தேவாலயத்திற்குக் குத்தகையைச் செலுத்த வேண்டும் எனக் காணி ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
குத்தகை மூலம் கிடைக்கின்ற அனைத்து நிதியையும் பிறர் நலச் சேவைக்காகவும்,சிறுவர் இல்லங்களில் உள்ள தேவைகளை நிவர்த்தி செய்யவும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.
மேலும் மாவட்ட காணி பயன்பாட்டு திட்டமிடல் கூட்டத்தில் மடு தேவாலயத்திற்குப் பயிர்ச் செய்கைக்குக் காணி 50 ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பாகவும்,குறித்த காணியில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் 27 விவசாயிகள் உர சலுகையைப் பெற்றுக்கொள்வதற்காக இவ்வளவு காலமும் காணி உரிமையாளராக மடு தேவாலயம் என்று குறிப்பிட்டு ஆவணம் தயாரித்து உரச் சலுகையையும் பெற்று வந்துள்ளனர்.
மேலும் குறித்த 27 விவசாயிகளும் தங்களது கையினால் எழுதியுள்ள கடிதத்தின் அடிப்படையில் மடு தேவாலயத்திற்குச் சொந்தமான கோயில் மோட்டையில் உள்ள வயல் காணியை விவசாய செய்கைக்குக் குத்தகைக்குத் தந்து உதவும் படியும், குத்தகையாக ஒரு காணிக்கு ஒரு மூட்டை நெல் கொடுப்பதற்கு ஒப்புதல் வழங்குவதாகவும்,தங்களின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக நடப்பேன் எனக் கூறிக் கொள்கிறோம் என விவசாயிகள் தங்களது கையொப்பத்துடன் கடிதத்தைச் சமர்ப்பித்து உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.