நாகர்கோவில் படுகொலையின் 25வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகா வித்தியாலய பாடசாலை மீது தாக்குதல் நடத்தப்பட்ட 25 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று நினைவு கூரப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்களான ஆ.சுரேஸ்குமார் மற்றும் வே.பிரசாந்தன் ஆகியோர் சுடரேற்றியும், அகவணக்கம், மலர் வணக்கம் செலுத்தியும் நினைவு கூர்ந்தனர்.
1995ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி நண்பகல் 12.30 மணியளவில் மாணவர்கள் தமது விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் இலங்கை விமானப்படையின் புக்காரா விமானத்தால் கண்மூடித்தனமாக நடாத்தப்பட்ட குண்டுவீச்சில் 21 மாணவர்கள் உட்பட 39 பேர் பலியாகினர். 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயங்களுக்குள்ளானர்.
விமானத்தின் சத்தத்தைக் கேட்ட மாணவர்கள் பயத்தினால் ஒரு மரத்தின்கீழ் நின்றவேளை மரத்தின்மீது விழுந்த குண்டினால் அந்த இடத்திலேயே 21 மாணவர்கள் உடல் சிதறிப் பலியானார்கள். இவர்கள் அனைவரும் 6-16 வயதுக்குட்பட்ட மாணவர்களாவர்.