விவசாய திணைக்கள களஞ்சியசாலை உடைத்து 250 கிலோ உரம் கொள்ளை
கொக்கட்டிச்சோலை விவசாய திணைக்கள காரியாலயத்தில் களஞ்சிய அறையை உடைத்து அங்கு 5 உரைப்பையில் இருந்த 250 கிலோ கிராம் கொண்ட உரம் இனம் தெரியாத நபர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (14) இரவு இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த திணைக்களத்தில் கடமையாற்றுபவர்கள் வழமைபோல சம்பவதினமான நேற்று மாலை பூட்டிவிட்டு சென்றுள்ள நிலையில் நேற்று இரவு மோட்டர்சைக்கிளில் வந்த சிலர் களஞ்சியசாலையின் பூட்டை உடைத்து அங்கிருந்த உரத்தை கொள்ளையிட்டுள்ளனர்.
இதன்போது திணைக்களத்துக்கு அருகாமையில் குடியிருப்புகளில் இருந்த நாய்கள் கொள்ளையர்களை கண்டு குரைத்ததையடுத்து கள்ளர் என அங்கிருந்தவர்கள் சத்தம் போட்டதையடுத்து 50 கிலோ கிராம் கொண்ட ஒரு பையிலான் உரத்தை அங்கு விட்டுவிட்டு ஏனைய 5 பை கொண்ட 250 கிலோ கிராம் உரத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
இதேவேளை கடந்த சிலதினங்களுக்கு முன்னர் பிரபல வர்த்தகர் ஒருவர் தனது நெல்வேளாண்மைக்கு உரத்தை பயன்படுத்துவதற்காக ஆயித்தியமலை, குறிஞ்சாமுனை வயல்பகுதி வாடி ஒன்றில் 50 மூடை உரத்தை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த நிலையில் அங்கு சென்ற கொள்ளையர்கள் காவலாளியின் கைகளை கட்டிவிட்டு அங்கிருந்த உரத்தை கொள்ளையிட்டு சென்றுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.