2 இலட்சம் இலங்கையர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு - பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு
2026ஆம் ஆண்டில் 250,000 இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் திட்டமிட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்புகள், இலங்கை அரசாங்கம் மற்றும் பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் மூலம் இலங்கையர்களுக்கு வழங்கப்படும் என்றும் பணியகம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் அதிகரித்த போர் பதற்றம்
மத்திய கிழக்கில் நிலவும் இராணுவச் சூழல் காரணமாக, வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் சற்றுக் குறைவு ஏற்பட்டிருந்தாலும், அதிக ஊதியம் தரும் வேலைகளுக்காகப் பாதுகாப்பான இடங்களுக்குத் தொழிலாளர்களை வழிநடத்த பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, 2026ஆம் ஆண்டில் இதுவரை 143,087 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில், இவர்களில் 92,590 பேர் ஆண் தொழிலாளர்கள் மற்றும் 50,497 பேர் பெண் தொழிலாளர்கள் உள்ளடங்குகின்றனர்.
அந்நிய செலாவணி அதிகரிப்பு
இதற்கிடையில், இலங்கைத் தொழிலாளர்களின் விருப்பமான இடமான இஸ்ரேலுக்கு 14,000 தொழிலாளர்களை அனுப்ப பணியகம் திட்டமிட்டு, இதுவரை அவர்களில் 7,873 பேர் வேலைக்குச் சென்றுள்ளனர்.
அத்துடன், 8,000 தொழிலாளர்களை தென் கொரியாவிற்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை 4,794 பேர் அங்கு பணிக்குச் சென்றுள்ளனர்.

பணியகத் தரவுகளின்படி, 2026 ஆம் ஆண்டில் இதுவரை 73,623 தொழிலாளர்கள் திறன் சார்ந்த பணிகளுக்காகவும், 69,494 தொழிலாளர்கள் திறன்சாரா பணிகளுக்காகவும் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள், 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாகவும் தரவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.