முல்லைத்தீவில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் அடையாளம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், மாந்தைகிழக்கு, துணுக்காய் ஆகிய ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்களாக 239பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெலிஓயா பிரதேசசெயலாளர் இது தொடர்பில் தரவுகளைத் திரட்டும்போது அச்சுறுத்தல்களுக்கு உள்ளானமையால், இதுதொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க முடியவில்லையெனவும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு க் குழுக்கூட்டத்தில் இன்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் சட்டவிரோத மது மற்றும், போதைப்பொருட்களைத் தடுக்க மிகக் கடுமையான நடவடிக்கைதேவை என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபடுபவர்களாக கரைதுறைப்பற்றுப் பிரதேசத்தில் 87பேரும், புதுக்குடியிருப்பில், 28பேரும், ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 50பேரும், துணுக்காய் பிரதேசத்தில் 34பேரும், மாந்தைகிழக்கு பிரதேசத்தில் 40பேருமாக முல்லைத்தீவுமாவட்டத்தில் மொத்தம் 239நபர்கள் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபடுவதாக இங்கே சுட்டிக்காட்டப்பட்டது.
அத்தோடு சட்டவிரோத மது விற்பனையாளர்கள் தொடர்பில் விபரங்களைத் திரட்டும்போது அச்சுறுத்தல் நிலைமைகள் ஏற்பட்டதாகத் தெரிவித்து வெலிஓயா பிரதேசசெயலாளரால் இதுதொடர்பான அறிக்கை கையளிக்கமுடியாமல் போனதாகவும் இதிலே சுட்டிக்காட்டப்பட்டது.
இவ்வாறானதொரு நிலையிலே அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால் அதிகளவானோர் முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழக்கின்ற நிலமைகள் காணப்படுகின்றன.
பலகிராமங்களுக்கு மக்கள் குறைகேள் சந்திப்பிற்காகச் சென்றபோது மக்கள் போதைப்பொருள் ஊடுருவல்கள் அதிகரித்துள்ளமைதொடர்பிலும், அதனால் ஏற்படுகின்ற மிக மோசமானபாதிப்பு நிலமைகள் குறித்தும் முறையிட்டு கண்ணீர் வடிக்கின்றனர்.
புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகப் பிரிவு
குறிப்பாக புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட நான்கு கிராமங்களில் ஏறக்குறைய 48பேரளவில் போதைப் பொருள்பாவனையால் உயிரிழந்துள்ளதாக மக்கள் முறையிட்டனர்.
அதேபோல் 2009ஆம் ஆண்டிற்கு முன்னர், விடுதலைப்புலிகளின் காலத்தில் இவ்வாறான போதைப்பொருள் ஊடுருவல்களும், பாவனைகளும் இருக்கவில்லை.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான அரசபடையினர் காணப்படுகின்றனர். குறிப்பாக இரண்டு பொதுமக்களுக்கு ஒரு படையினர்காணப்படுகின்றனர். இவ்வாறு அதிகளவான படையின் இருக்கத்தக்கதாக இவ்வாறு போதைப்பொருள் ஊடுருவல்களும், போதைப்பொருள் பாவனைகளும் அதிகரித்திருக்கின்றன.
இது தொடர்பில் உரிய தரப்பினர் ஏன் கவனம்செலுத்தவில்லை. அதேவேளை சில பொலிசாருக்கும் போதைப் பொருள் விற்பனையாளர்களுக்குமிடையில் நெருங்கிய தொடர்புகள் காணப்படுவதாகவும் மக்கள் எம்மிடம் முறையிடுகின்றனர்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
