இலங்கை அரசியலில் பேசுபொருளாகியுள்ள 22ஆவது சட்டமூல திருத்தம்.. நீதியமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்கான விதிகளை உள்ளடக்கிய 22ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவு சட்டமூலம், ஒகஸ்ட் 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இது தொடர்பிலான அறிவிப்பை, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்கார இன்று வெளியிட்டுள்ளார்.
நீதித்துறை திருத்த சட்டமூலமூம் அதே நாளில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்பதை நீதி அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான அரசாங்கத்தின் முன்மொழிவு, தொடக்கத்திலிருந்தே மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் மற்றும் பல சர்வதேச அமைப்புகள் உட்பட பலரிடமிருந்து எதிர்ப்பைச் சந்தித்தது.
தொடர் எதிர்ப்பு
இந்த எதிர்ப்புகளையும் மீறி, நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பாக முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்தை அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டது.

இதற்கிடையில், முன்மொழியப்பட்ட திருத்தத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வலியுறுத்தி வருகிறார்.
சட்டத்தரணிகள் சங்க தலைவர் மற்றும் பிற பிரதிநிதிகளுடனான அண்மைய சந்திப்பின்போதும் அவர் இதே நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்தப் பின்னணியில், 22ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலமூம், நீதித்துறை திருத்த சட்டமூலமூம் ஒகஸ்ட் 18ஆம் திகதி அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று ஹர்ஷன நாணயக்கார உறுதிப்படுத்தியுள்ளார்.
அரசியலமைப்பின்படி, ஒரு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டவுடன், அதனை உயர் நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்குத் தொடர 14 நாட்கள் அவகாசம் உள்ளது.
உயர் நீதிமன்றம் அத்தகைய மனுக்களை விசாரித்து, மூன்று முதல் 21 நாட்களுக்குள் தனது தீர்ப்பை நாடாளுமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.